Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

மே.வங்கத்துக்கு பிறகு கேரளாவில் கவனம் செலுத்துவோம்: பாஜக மூத்த தலைவர் கோபால் கிருஷ்ண அகர்வால் தகவல்

பாஜக மூத்த தலைவர் கோபால் கிருஷ்ண அகர்வால் திருவனந்த புரத்தில் நேற்று கூறியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொலைநோக்குபார்வையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.இதன்காரணமாக தொழில் முதலீடுகள் பெருகி வருகின்றன. ஆனால் மார்க்சிஸ்ட் ஆதிக்கம் காரணமாக கேரளாவில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் தயங்குகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மிக குறுகிய காலத்தில் அந்தமாநிலம் அதிவேகமாக முன்னேறிவருகிறது. இதேபோல கேரளாவிலும் பாஜகவால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அறிவுசார் தலைமையிடமாக கேரளா திகழ்கிறது. கேரளாவின் சுற்றுலாத் தலங்கள், மசாலா பொருட்களுக்கு சர்வதேச அளவில்பெரும் வரவேற்பு உள்ளது. இவை உட்பட பல்வேறு துறைகளில் கேரளாவை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல முடியும்.

மேற்குவங்கத்துக்குப் பிறகு கேரளாவில் சிறப்பு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம். கேரளாவில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றால் மாநிலத்தின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இளைஞர்களின் வேலைவாய்ப்பு, நீர்வழிப்போக்குவரத்து, ரப்பர் உற்பத்தி, வேளாண் சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக உள்ள கோபால்கிருஷ்ண அகர்வால், மேற்குவங்கத்தில் பாஜக ஆழமாக கால் ஊன்ற வித்திட்டார். தற்போது அவரது வழிகாட்டுதலில் கேரளாவிலும் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x