Published : 08 Mar 2021 05:27 PM
Last Updated : 08 Mar 2021 05:27 PM

‘‘மேற்குவங்கத்தில் பெண்கள் பாதுகாப்பு இல்லை என பிரதமர் மோடி கூறுகிறார்; மோடி ஆட்சியில் மேற்குவங்கத்திற்கே பாதுகாப்பு இல்லை’’ - மம்தா பானர்ஜி  கடும் சாடல்

மேற்குவங்கத்தில் பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக பிரதமர் மோடி கூறுகிறார். பிரதமர் மோடியின் ஆட்சியில் மேற்குவங்க மாநிலத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம்தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்தார்.

அவர் பேசியதாவது:

அமித் ஷா மற்றும் நரேந்திர மோடி ஆகிய இரு சிண்டிகேட் அமைச்சர்களும் மேற்குவங்கத்திற்கு வரும்போதெல்லாம் தொடர்ந்து பொய்களை கூறி வருகின்றனர். மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக அவர்கள் கூறுகின்றனர். பிரதமர் என்ற பதவி மீது நான் மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவர் அதற்குரிய முறையில் பேசவில்லை.

பிரதமர் மோடியின் ஆட்சியில் மேற்குவங்க மாநிலத்திற்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பிறகு எப்படி மேற்குவங்கத்தில் பெண்கள் இரவு 12 மணிவரை வெளியே நடமாட முடியும். காலையில் 4 மணிக்கு கூட பெண்களால் நடமாட முடியாத சூழல் தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x