Published : 08 Mar 2021 12:44 PM
Last Updated : 08 Mar 2021 12:44 PM

கரோனா பரவல்; உயர் திறன் ஏர் பில்டர் மாஸ்க் அணிந்து நாடாளுமன்றம் வந்த எம்.பி.

மாநிலங்களவை எம்.பி. நரேந்திர ஜாதவ் நாடாளுமன்றத்திற்கு உயர் திறன் கொண்ட ஏர் பில்டர் மாஸ்க் அணிந்து வந்தார். இந்த மாஸ்க் 99.7 சதவீத அளவிற்கு கரோனா கிருமிகள் பரவுதை தடுக்கும் திறன் கொண்டது என அவர் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும், 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 29-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் இரு அவைகளிலும் நடந்தது. பட்ஜெட் மீதான விவாதங்களும் இரு அவைகளிலும் நடந்தன. முதல் அமர்வில் மக்களவை 99.5 சதவீதம் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டது என்றும், 50 மணி நேரம் கூட்டத்தொடரை நடத்தத் திட்டமிடப்பட்டதில் 49 மணி நேரம் 17நிமிடங்கள் கூட்டத்தொடர் நடந்தது என்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

இந்நிலையில் 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது. கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு வழக்கம் போல் மாநிலங்களவை காலை நேர அமர்விலும், மக்களவை மாலையும் திட்டமிடப்பட்டு இருந்தது. வழக்கம்போல் நாடாளுமன்றத்திற்கு வந்த எம்.பி.க்கள் அனைவரும் கரோனா நெறிமுறைகளை பின்பற்றி முகவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கூட்டத்தொடரில் பங்கேற்றனர்.

மாநிலங்களவை எம்.பி. நரேந்திர ஜாதவ் நாடாளுமன்றத்திற்கு உயர் திறன் கொண்ட ஏர் பில்டர் மாஸ்க் அணிந்து வந்தார். இந்த மாஸ்க் 99.7 சதவீத அளவிற்கு கரோனா கிருமிகள் பரவுதை தடுக்கும் திறன் கொண்டது என அவர் கூறினார். எந்த கிருமிகளும் வாய் மற்றும் மூக்கு வழியாக நமது உடலுக்குள் செல்லாமல் தடுக்கும் திறன் கொண்ட நவீன முகவசம் இது என அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x