Last Updated : 08 Mar, 2021 12:20 PM

 

Published : 08 Mar 2021 12:20 PM
Last Updated : 08 Mar 2021 12:20 PM

முட்டள்தனமான பேச்சு; மேற்கு வங்கம் காஷ்மீராக மாறினால் என்ன தவறு? சுவேந்து அதிகாரியின் பேச்சுக்கு உமர் அப்துல்லா பதிலடி

காஷ்மீர் மாநிலம் சொர்க்கமாக இருப்பதாக பாஜகவினர் கூறி வரும் நிலையில், மேற்கு வங்கம் காஷ்மீராக மாறினால் என்ன தவறு என்று சுவேந்து அதிகாரியின் பேச்சுக்குத் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசில் கேபினட் அமைச்சராக இருந்தவர் சுவேந்து அதிகாரி. திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து தற்போது மம்தாவைக் கடுமையாக எதிர்த்து வருகிறார். மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

பெஹாலியா நகரில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் சுவேந்து அதிகாரி பேசம்போது, “இன்றைய சூழலில் ஷியாமா பிரசாத் முகர்ஜி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த தேசம் முஸ்லிம் தேசமாக மாறியிருக்கும், நாமெல்லாம் வங்கதேசத்தில் வாழ்ந்திருப்போம். மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்கம் காஷ்மீராக மாறிவிடும். காஷ்மீரில் பண்டிட்களுக்கு ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும்” எனத் தெரிவித்தார்.

சுவேந்து அதிகாரியின் பேச்சுக்குத் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தபின், காஷ்மீர் சொர்க்கமாக மாறிவிட்டது என்று பாஜகவினர் கூறி வருகிறார்கள்.

அப்படி இருக்கும்போது, காஷ்மீராக மேற்கு வங்க மாநிலம் மாறுவதில் என்ன தவறு இருக்கிறது. எந்தச் சூழலிலும் என் சகோதரர்களான மேற்கு வங்க மக்கள் காஷ்மீரை விரும்புவார்கள். அதிகமான அளவில் சுற்றுலா வருவார்கள். உங்களின் முட்டாள்தனமான, ரசனையில்லாத பேச்சை மன்னிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x