நக்ஸல், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை கிடையாது: ராஜ்நாத் சிங்

நக்ஸல், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை கிடையாது: ராஜ்நாத் சிங்
Updated on
1 min read

நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மாநில உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பிஹார், ஒடிஷா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை தலைவர்கள், சி.ஆர்.பி.எப்., பி.எஸ்.எப். உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங் நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து மாநிலங்களிலும் ஒரேமாதிரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். காவல்துறையினருக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் ராஜ்நாத் சிங் கூறியதாவது:

சத்தீஸ்கர், ஒடிஷா, ஜார்க்கண்ட், பிஹார் மாநிலங்களில் நக்ஸல் எதிர்ப்பு சிறப்புப் படை உருவாக்கப்படும். ஆந்திரப் பிரதேசத்திலும் இந்தப் படை விரைவில் அமைக்கப்படும். இதற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கும்.

நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது. அவர்கள் தாக்குதல் நடத்தினால் பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுப்பார்கள். நக்ஸல்களை எதிர்கொள்ளும் வகையில் காவல்துறை நவீனப்படுத்தப்படும். இதற்கான நிதியுதவி, நவீன ஆயுதங்களை மத்திய அரசு வழங்கும்.

காவல் துறையிடம் சரண் அடையும் நக்ஸல் தீவிரவாதிகளுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். அவர்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்து தரப்படும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு இணையாக இதரப் பகுதிகளில் பணியாற்றும் வீரர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in