

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வங்க மண்ணின் மகள் கிடையாது. ஊடுருவல்காரர்கள், ரோஹிங்கியாக்களின் அத்தை என்று பாஜகவின் நந்திகிராம் வேட்பாளர் சுவேந்து அதிகாரி கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் இருகட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதியும், ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி கொல்கத்தாவில் இன்று தொடங்கி வைத்தார்.
கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் பாஜக சார்பில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி பேசுவதற்கு முன் நந்திகிராம் பாஜக வேட்பாளரும், திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த சுவேந்து அதிகாரி பேசினார்.
அவர் கூறியதாவது:
''திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி ஆகியவை மேற்கு வங்கத்தில் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து துண்டாட முயல்கின்றன. திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்கம், காஷ்மீராக மாறிவிடும். காஷ்மீரில் பண்டிட் சமூகத்தினருக்கு என்ன நடக்குமோ அதுதான் இங்கு உங்களுக்கும் நடக்கும்.
மேற்கு வங்கத்துக்கு மண்ணின் மகள்தான் தேவை. ஆனால், மம்தாவை இந்த மக்கள் சொந்த மகளாக ஏற்கமாட்டார்கள். நீங்கள் ஊடுருவல்காரர்கள், ரோஹிங்கியாக்களின் அத்தை. திரிணமூல் காங்கிரஸ் கட்சியாக இல்லாமல் தனியார் நிறுவனமாக மாறிவிட்டது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தாதான் நிறுவனத்தின் தலைவர். ஊழல் படிந்த அவரின் மருமகன்தான் இயக்குநர்.
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டம், நிலக்கரி கடத்தல், பசுக்கடத்தல் ஆகியவற்றில் பணத்தைக் கொள்ளையடித்தார்கள்''.
இவ்வாறு சுவேந்து அதிகாரி குற்றம் சாட்டினார்.