Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

27 ஆண்டுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை - தந்தை பெயரை மகன் கேட்டதால் பெண் புகார்

ஷாஜகான்பூர்

உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் காவல் கண்காணிப் பாளர் சஞ்சய் குமார் நேற்று கூறியதாவது:

ஷாகாபாத் காவல் எல்லைக்கு உட்பட்ட உதம்பூர் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் 27 ஆண்டுகளுக்கு முன் தனது 12 வயதில் ஷாஜகான்பூரில் வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த நகி ஹசன், அவரது தம்பி குட்டு ஆகிய இருவரும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் கருவுற்ற அப்பெண்ணுக்கு 13-வது வயதில் 1994-ல் ஆண் குழந்தை பிறந்தது.

அக்குழந்தை அப்பெண்ணின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு காஜிபூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு அப்பெண் திருமணம் செய்துவைக்கப்பட்டார்.

எனினும் 10 ஆண்டுகளுக்கு பிறகு, அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர் என்பதை அறிந்த கணவர், அவரை விவாகரத்து செய்தார். இதையடுத்து அப்பெண் சொந்த ஊர் திரும்பி, வசித்து வந்தார்.

இந்நிலையில் இளைஞனாக வளர்ந்துவிட்ட அவரது மகன், அப்பெண்தான் தனது தாய் என்பதை உறவினர்கள் மூலம் அறிந்தார். தாயை சந்தித்த இளைஞர், தனது தந்தை யார் என்று கேட்டார்.

இதையடுத்து அப்பெண், ஷாஜகான்பூர், சதார் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் 2 பேருக்கு எதிராக, வெள்ளிக்கிழமை குழுபலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x