

மாட்டிறைச்சி தொடர்பாக ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார் கூறிய கருத்துகள் பாஜகவின் நிலைப்பாடு அல்ல என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில முதல்வர் மனோகர் லால் கத்தார் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ விரும்பினால் அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் கத்தாரை கடுமையாக கண்டித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று கூறியதாவது:
முதல்வர் மனோகர் லால் கத்தார் கூறிய கருத்துகள் பாஜகவின் நிலைப்பாடு அல்ல. இதுபோல பேசுவதை தவிர்க்குமாறு கத்தாரிடம் அறிவுறுத்துவேன்.
மக்களின் சாப்பிடும் பழக்கத்தை மதத்தோடு ஒப்பிடுவது தவறானது. எதை சாப்பிட வேண்டும் என்பது தனிநபர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. ஒருவரின் சாப்பிடும் பழக்கத்துக்காக அவரை கொலை செய்வது அநாகரிகம். உத்தரப் பிரதேசம், தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்கு உரியது.
இந்த விவகாரம் உத்தரப் பிரதேச அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை. இதில் மத்திய அரசின் மீது குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது. நாட்டை முன்னேற்ற பாதையில் வழிநடத்திச் செல்ல பிரதமர் நரேந்திர மோடி அயராது உழைத்து வருகிறார். ஆனால் அதை சீர்குலைக்கும் வகையில் அவதூறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.