Published : 06 Mar 2021 10:42 PM
Last Updated : 06 Mar 2021 10:42 PM

நீங்கள் இதுவரை டீல் செய்தவர்களைப் போன்றவர்கள் அல்ல நாங்கள்: பாஜகவுக்கு பினராயி விஜயன் எச்சரிக்கை

தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சியினர் மீது அமலாக்கப் பிரிவை ஏவிவிடுவது போன்ற செயல்களால் பாஜக மற்ற மாநிலங்களில் நிகழ்த்தியது போன்ற சம்பவங்களை கேரளாவில் நிகழ்த்த இயலாது என முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.

ஓமன் நாட்டிலிருந்து திருவனந்தபுரத்துக்குத் தூதரகத்தின் உதவியைப் பயன்படுத்தி அமெரிக்க டாலர்களைக் கடத்திய வழக்கில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:

நான் பாஜகவுக்கும் அதன் கைப்பாவையாக ஆடும் மத்திய அரசின் அமைப்புகளுக்கும் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இதுவரை டீல் செய்தவர்களைப் போன்றவர்கள் அல்ல நாங்கள். எங்களின் போக்கு வித்தியாசமானது. நீங்கள் என்ன செய்தாலும் இந்த மண் எங்களை அவதூறாகப் பேசாது. ஏனெனில் இங்கு எங்களின் வாழ்க்கை திறந்த புத்தகம் போன்றது.

சுங்கத் துறையின் இலக்கு கேரள மாநில அரசை அவமதிக்க வேண்டும். அதன் மாண்புக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதே. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும்போது இதைச் செய்து, பாஜக ஆதாயம் தேட முயற்சிக்கிறது.

மத்திய புலனாய்வு அமைப்புகள் தேர்தல் பிரச்சாரங்களைக் காட்டிலும் பரபரப்பாக இயங்குகின்றன. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் சுங்கத் துறை ஆணையர் மத்திய அரசின் பிரச்சாரகராக மாறிவிட்டார். மத்திய அமைப்புகள் அரசியல் அறிக்கைகள் போல் அறிக்கை வெளியிடுவது வேடிக்கையாக உள்ளது. கேரளாவில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறக் கூடாது என பாஜகவும், காங்கிரஸும் விரும்புகின்றன.
டாலர் கடத்தல் வழக்கில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் வரும் 12-ம் தேதி கொச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சுங்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனின் துணைத் தனிச்செயலாளர் கே.ஐயப்பனிடம் , டாலர் கடத்தல் தொடர்பாக 9 மணி நேரம் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x