Published : 06 Mar 2021 08:23 PM
Last Updated : 06 Mar 2021 08:23 PM

1982-ம் ஆண்டிலேயே இந்தியாவில் அறிமுகமான 'இவிஎம் இயந்திரம்': தேர்தலில் வென்ற சிபிஐ; வழக்குப் போட்டு வாக்குச்சீட்டில் வென்ற காங்.

கொச்சி

நாடு முழுவதும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் கடந்த 1998இல் பரவலாக நடைமுறைக்கு வந்திருந்தாலும், இந்தியாவில் 1982-ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, அதுவும் குழப்பத்தில் முடிந்த சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1982-ம் ஆண்டு கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில், பரவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 50 வாக்குப்பதிவு மையங்களில் மட்டுமே மின்னணு வாக்கு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே முதன்முதலாக மின்னணு வாக்கு இயந்திரங்கள் இங்குதான் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், வாக்கு இயந்திரங்கள் முதன்முதலில் பயன்படுத்தத் தேர்தலிலேயே குழப்பம் ஏற்பட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக ஏ.சி.ஜோஸும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.சிவன் பிள்ளையும் போட்டியிட்டனர். இருவருக்கும் கடும் நெருக்கடியான போட்டி இருந்தது. இதில் 123 வாக்குகள் வித்தியாசத்தில் சிவன் பிள்ளை வென்றார்.

ஆனால், தேர்தல் வெற்றியில் நம்பிக்கையில்லாத ஏ.சி.ஜோஸ், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், தேர்தல் விதிகள் 1961-ன்படி, தேர்தல் ஆணையம் மின்னணு வாக்கு இயந்திரங்களைப் பயன்படுத்த அனுமதியில்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி இவிஎம் இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்தார். ஆனால், ஜோஸின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆனால், கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜோஸ் மேல்முறையீடு செய்தார். ஜோஸ் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 1984-ம் ஆண்டு இவிஎம் பயன்படுத்தப்பட்ட 50 வாக்கு மையங்களுக்கும் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதில் வாக்குச்சீட்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.

50 வாக்கு மையங்களுக்கு மட்டும் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட்ட மறுதேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.சி.ஜோஸ் வெற்றி பெற்றார்.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தேர்தல் விதிகள் 1961-ன்படியும் வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். புதிய முறையில் தேர்தல் நடத்தப்படக் கூடாது" எனத் தெரிவித்தது.

இதையடுத்து, கடந்த 1992இல் நாடாளுமன்றத்தில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் தேர்தல் விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு புதிதாகப் பிரிவு 61ஏ சேர்க்கப்பட்டது. இதன்படி கடந்த 1998-ம் ஆண்டு முதல் பரவலாக நாடு முழுவதும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

இப்போது புதிய முறையாக, வாக்கு அளித்தபின் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்துகொள்ளும் வசதியாக ஒப்புகைச் சீட்டு நடைமுறையும் வந்துள்ளது. அந்த சீட்டில் வாக்காளர் எந்தக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்தார்கள், அவரின் சீரியல் எண், வேட்பாளர் பெயர் ஆகியவை இடம் பெற்றிருக்கும். அந்த சீட்டை வாக்காளர் ஆய்வு செய்தபின், அருகே இருக்கும் பெட்டியில் போட்டுவிட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x