

நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்த்து குரல் கொடுங்கள் என்று காங்கிரஸ் கட்சி ஆன்லைன் மூலம் பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளது. மக்களைத் துன்பத்தில் தள்ளி வரியை ஈட்டுகிறது மத்திய அரசு என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் நிலை பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறது. விலைவாசி உயர்வைக் குறைக்க வேண்டும், பெட்ரோல்,டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் எனக் கோரி தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது
இந்நிலையில் விலைவாசி உயர்வுக்கு எதிராகக் குரல்கொடுப்போம் என்று ஆன்லைன் மூலம் பிரச்சாரத்தைக் காங்கிரஸ் கட்சி இன்று தொடங்கியுள்ளது. இதில் மக்கள் அனைவரும் பங்கேற்று விலைவாசி உயர்வுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வட்விட்டர் பதிவில் " பாஜக அல்ல பர்டன்(சுமைஏற்றும்) ஜனதா கட்சி. நாட்டின் நலனுக்காக விரைவில் பாஜகவினர் கொள்ளைக்கு எதிராகப்பேசுவோம். வாருங்கள் எங்களுடன் இணையுங்கள். வாருங்கள்" எனத் தெரிவித்த, #ஸ்பீக்அப்எகெயின்ஸ்ட்பிரைஸ்ரைஸ் (#SpeakUpAgainstPriceRise) எனும் ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " விலைவாசி உயர்வு சாபம். மக்களை விலைவாசி உயர்வு எனும் துன்பத்தில் தள்ளி வரிவருவாயை ஈட்டுகிறது. நாட்டை அழிக்கும் செயலுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள்" என்று தெரிவித்து #ஸ்பீக்அப்எகெயின்ஸ்ட்பிரைஸ்ரைஸ் (#SpeakUpAgainstPriceRise) என ஹேஸ்டேக்கை பதிவிட்டுள்ளார்.
மேலும், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வு குறித்த வீடியோ ஒன்றையும் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது ட்விட்டரில் வீடியோவை பதிவிட்டுள்ளார், " அதில், விலைவாசி உயர்வுக்கு எதிராகக் குரல் கொடுங்கள். மோடி அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சாமானிய மக்களின் பாக்கெட்டை காலி செய்து, பாஜகவின் கஜானாவை நிரப்புகிறது. இந்தியா இதற்குமேல் பொறுமையாக இருக்காது. இந்தியா கிளர்ந்தெழும், விலைவாசி உயர்வுக்கு எதிராகக் குரல் கொடுப்போம்" எனத் தெரிவித்தார்