Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடரில் ஆபாசம் ஓடிடி.யை கட்டுப்படுத்த விதிமுறைகள் அவசியம்: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி

ஓடிடி தளங்களில் வெளியாகும் சில திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் ஆபாசம் நிறைந்ததாக உள்ளதாகவும், இதைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் ஊடகங்களைக் கட்டுப்படுத்த கொண்டு வந்த சட்ட விதிமுறைகள் இவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் உள்ளனவா என்றும், அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சில ஓடிடி தளங்களில் ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பாகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை அவசியம் என்று உச்ச நீதிமன்ற அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.

அமேசான் பிரைம் வீடியோ பிரிவின் வர்த்தகப் பிரிவு தலைவர் அபர்ணா புரோஹித் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை அலாகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. டான்டவ் என்ற இணையதள தொடர் குறித்தவிசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழலில் அவர் முன் ஜாமீன்கோரியிருந்தார். இதை அலாகாபாத்உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில் அவரது மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மத்திய அரசு பிறப்பித்துள்ள விதிமுறைகளை பரிசீலித்த பிறகு அபர்ணா புரோஹித்தின் ஜாமீன் மனு மீது தீர்ப்பளிப்பதாக நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது.

கடந்த பிப்ரவரி 25-ம் தேதி சமூக ஊடகங்கள், ஓடிடி தளங்கள் உள்ளிட்டவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்தியாவில் டிஜிட்டல் தளத்தில் இயங்கும் அனைத்துநிறுவனங்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. புதிய விதிமுறையின்படி ஓடிடி தளங்கள், டிஜிட்டல் ஊடங்கள் தாங்கள் வெளியிடும் படங்கள் குறித்த விவரங்களையும், தங்களது சந்தாதாரர் குறித்த விவரத்தையும் வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் நுகர்வோர் குறைதீர்ப்பு அமைப்பையும் அவை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது பிரபலமானவரைக் கொண்ட சுயகட்டுப்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்று கட்ட பரிசீலனை வழிகாட்டுதலும் அமைக்க வேண்டும் என விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து கடவுள்களைமிகவும் இழிவுபடுத்தும் விதமாகடான்டவ் தொடரில் காட்சிகள் இடம்பெற்றதால் அது அப்பகுதியில் மதவன்முறையைத் தூண்டும் என்பதால் உத்தரப் பிரதேச போலீஸார் அமேசான் பிரைம் உயர் அதிகாரி அபர்ணா புரோஹித் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்தத் தொடரில் நடித்த நடிகர் முகமது ஜீஷன் அயுப், அபர்ணா புரோஹித் ஆகியோர் முன் ஜாமீன் கோரியிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x