Last Updated : 04 Mar, 2021 05:00 PM

 

Published : 04 Mar 2021 05:00 PM
Last Updated : 04 Mar 2021 05:00 PM

மம்தா பானர்ஜிக்கு ஆதரவு பெருகுகிறது: சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா நேசக்கரம்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி : கோப்புப்படம்

கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளிப்பதாக சிவசேனா கட்சித் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக் கட்சியும், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், 3-வதாக சிவசேனாவும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்த 3 கட்சிகளும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளன.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம்தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் முதல்வர் மம்தாவின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் கடந்த வாரத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் , மம்தா பானர்ஜியை சந்தித்துச் சென்றார். அப்போது வரும் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம்கட்சி திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் எனத் தெரிவித்தார்.

சமாஜ்வாதிக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும், வரும் தேர்தலில் மம்தாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியாக இருக்கும் சிவசேனா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், மம்தா பானர்ஜிதான் உண்மையான பெண்புலி என்றும் புகழ்ந்துள்ளது.

சிவசேனா கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளரும், எம்.பியுமான சஞ்சய் ராவத் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் "மே.வங்கத் தேர்தலில் சிவசேனா கட்சி போட்டியிடுகிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள ஏராளமான மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆலோசனை நடத்தியபின் முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சிவேசனா ஆதரவு அளிக்கும். ஆங்கிலத்தில் உள்ள எம் எழுத்துக்களான மணி (பணம்), படைபலம் (மசுல்பவர்) ஊடகம் (மீடியா) ஆகிய அனைத்தும் மம்தாவுக்கு எதிராக பணியாற்றுகின்றன. இந்தத் தேர்தலில் சிவசேனா போட்டியிடாது, மம்தாவுக்கு ஆதரவாக இருக்கும். மம்தா சகோதரியின் வெற்றிக்கு உதவுவோம். மே வங்கத்தின் உண்மையான பெண் புலி மம்தாதான் என நம்புகிறோம் " எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x