Last Updated : 04 Mar, 2021 10:07 AM

 

Published : 04 Mar 2021 10:07 AM
Last Updated : 04 Mar 2021 10:07 AM

டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி 4, காங்கிரஸ் 1: பாஜகவுக்கு ஒரு வார்டிலும் வெற்றி இல்லை

டெல்லியின் மாநகராட்சி ஐந்து வார்டுகள் இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், ஆம் ஆத்மி 4 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும் வெற்றி பெற பாஜக வாஷ் அவுட் ஆனது.

இவற்றில் ரோஹிணி, திரிலோக்புரி மற்றும் கல்யாண்புரி வார்டுகளை ஆம் ஆத்மி தக்க வைத்துக் கொண்டது. இந்த மூன்றிலும் பாஜக இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

இத்துடன் பாஜகவிடம் இருந்த ஷாலிமார்பாக் வார்டையும் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி பறித்துள்ளது. எனினும், மீதம் உள்ள ஒன்றான சவுகான் பங்கர் வார்டில் ஆம் ஆத்மி காங்கிரஸிடம் பறி கொடுத்துள்ளது.

இந்த சவுகான் பங்கரில் காங்கிரஸின் வேட்பாளர் ஹுபேர் அகமது வெற்றி பெற்றுள்ளார். முஸ்லிம்கள் அதிகம் வாழும் இங்கு ஆம் ஆத்மியின் முகம்மது இஷ்ராக் கான், 10,647 வாக்குகளில் தோல்வியுற்றார்.

இது குறித்து ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவாலின் ட்வீட்டில், ‘சிறந்த பணிக்காக எங்களுக்கு டெல்லிவாசிகள் மீண்டும் வாக்களித்துள்ளனர்.

கடந்த 15 வருடங்களாக பாஜக நிர்வாகத்தினால் வெறுப்படைந்துள்ள மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். டெல்லி முனிசிபல் மாநகராட்சியில் ஆம் ஆத்மியின் நிர்வாகத்தை மக்கள் விரும்புகின்றனர்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜகவின் பொதுச்செயலாளர் ஹர்ஷ் மல்ஹோத்ரா கூறும்போது, ‘இந்த முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லை என்றாலும், மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்.

இதன் குறைகளை ஆய்வு செய்து அடையாளம் காண்போம். இவற்றை, 2022 மாநகராட்சி தேர்தலில் சரிசெய்வோம்.’ எனத் தெரிவித்தார்.

டெல்லியின் ஐந்து வார்டுகளின் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மிக்கு மிக அதிகமாக 46.10 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. அடுத்த நிலையில், பாஜகவிற்கு 27.29 சதவிகிதமும், காங்கிரஸுக்கு 21,84 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x