Last Updated : 03 Nov, 2015 08:48 AM

 

Published : 03 Nov 2015 08:48 AM
Last Updated : 03 Nov 2015 08:48 AM

மகாராஷ்டிர நகராட்சித் தேர்தலில் சிவசேனா அமோக வெற்றி: 122-ல் 52 இடங்களைக் கைப்பற்றியது

மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்துள்ள கல்யாண்-தோம்பிவலி நகராட்சி (கேடிஎம்சி) தேர்தலில் 52 இடங்களில் வெற்றி பெற்று சிவசேனா தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வில்லை.

கல்யாண்-தோம்பிவலி மற்றும் கொல்ஹாபூர் ஆகிய 2 நகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில், மாநிலத்தில் கூட்டாக ஆட்சி நடத்தி வரும் பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தனித்து போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

122 உறுப்பினர்களைக் கொண்ட கேடிஎம்சி-யில் 52 இடங்களில் சிவசேனா வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 9 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனினும், இப்போதைய மேயர் கல்யாணி பாட்டீல் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2010 தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி 40 இடங்களை மட்டுமே கைப்பற்றிய போதிலும் இதர கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா மேயர் பதவியை கைப்பற்றியது.

பாஜக 42 இடங்களிலும், ராஜ் தாக்கரே தலைமையிலான எம்என்எஸ் 9, காங்கிரஸ் 4, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) 2, இதர கட்சிகள் 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 2 இடங்களில் வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

81 உறுப்பினர்களைக் கொண்ட கொல்காபூர் நகராட்சி தேர்தலில் அதிகபட்சமாக காங்கிரஸ் 27 இடங்களிலும் என்சிபி 15, பாஜக கூட்டணி 32 (பாஜக 12, தரரனி முன்னணி 20), சிவசேனா 4, இதர கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நகராட்சியிலும் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

எனினும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று தனிப்பெரும் கட்சியாக உரு வெடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சதேஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x