Published : 02 Mar 2021 06:42 PM
Last Updated : 02 Mar 2021 06:42 PM

‘‘குஜராத் மக்களுக்கு தலை வணங்குகிறேன்’’- பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடெல்லி 

பாஜக மீது அளவிலான அன்பும், நம்பிக்கையும் கொண்ட குஜராத் மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த மாதம் 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 483 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 55 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. அசாதுதீனின் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 7 வார்டுகளை கைபற்றியுள்ளது. ஆம் ஆத்மி 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

சூரத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 120 வார்டுகளில் 93 இடங்களில் பாஜக வென்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. முதன்முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆம் ஆத்மி அங்கு முதன்முறையாக அடியெடுத்து வைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

இதில் மொத்தமுள்ள 31 மாவட்ட பஞ்சாயத்துகளிலும் பாஜகவே முன்னிலை பெற்றுள்ளது. நகராட்சிகளை பொறுத்தவரையில் மொத்தமுள்ள 81 இடங்களில் 71 நகராட்சிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 5 நகராட்சிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பிறர் 2 நகராட்சிகளில் முன்னிலை பெற்றுள்ளனர்.

தாலுகா பஞ்சாயத்துகளில் மொத்தமுள்ள 231 இடங்களில் பாஜக 185 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 34 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மாநகராட்சி வார்டுகளை வென்ற ஆம் ஆத்மி இந்த தேர்தலில் எந்த இடத்திலும் முன்னிலை பெறவில்லை.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:

‘‘குஜராத்தில் நகர்பாலிகா, தாலுகா பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் தெளிவான தகவலை தருகின்றன. பாஜகவின் வளர்ச்சி, நல்லாட்சி என்ற திட்டத்தை குஜராத் மக்கள் உறுதியாக ஏற்கிறார்கள். பாஜக மீது அளவிலான அன்பும், நம்பிக்கையும் கொண்ட குஜராத் மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x