Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் கொல்கத்தாவில் நேற்று சந்தித்துப் பேசினார்.
மேற்குவங்கத்தில் வரும் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி வரை 8 கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்த பின்னணியில் ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் நேற்று சந்தித்துப் பேசினார். இதன்பின் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:
முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். மத்தியில் ஆளும் பாஜக நாட்டை அழித்து வருகிறது. நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம், மொழிகள், இலக்கியங்களை காப்பாற்ற வேண்டும். அரசிய லமைப்பு சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு பாஜகவை தோற்கடிக்க வேண்டும்.
பிஹாரில் மட்டுமே இடதுசாரி, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மேற்கு வங்கத்தில் திரிண மூல் காங்கிரஸுடன் கைகோத்து செயல் படுவோம். மேற்குவங்கத்தில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று பாஜக கனவு காண்கிறது. அந்த கனவு பலிக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதல்வர் மம்தா கூறியதாவது:
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் அபார வெற்றி பெற்றது. ஆனால் பாஜக முறைகேடு செய்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பிஹாரில் விரைவிலோ, பின்னரோ ராஷ்டிரிய ஜனதா தள அரசு பதவியேற்கும். அந்த கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தை எனது தந்தையாக மதிக்கிறேன். அவரை விடுவித்தால், பாஜக இழப்பை சந்திக்க நேரிடும். இதன்காரணமாக அவர் சிறையில் கொடுமைப்படுத்தப்படுகிறார். பிஹாரில் பாஜக நீண்ட காலம் நிலைக்காது. மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெற முடியாது" என்று தெரிவித்தார்.
பிஹாரை பூர்விகமாகக் கொண்ட மக்கள், மேற்குவங்கத்தின் ஹவுரா, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் கணிசமாக வசிக்கின்றனர். எனவே திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மேற்குவங்க தேர்தலில் போட்டியிட ராஷ்டிரிய ஜனதா தளம் திட்டமிட்டுள்ளது. அந்த கட்சி சார்பில் 10 முதல் 12 தொகுதிகளை ஒதுக்க முதல்வர் மம்தாவிடம், தேஜஸ்வி யாதவ் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்குவங்க முதல் கட்ட தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இதுவரை எந்த கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. திரிணமூல் காங்கிரஸ் சார்பில் விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT