Published : 01 Mar 2021 06:41 PM
Last Updated : 01 Mar 2021 06:41 PM

கோவாக்ஸின் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி; ஜெர்மனி கூறும் தகவல்- தற்செயலானதா?- ஒவைசி கேள்வி

ஹைதராபாத்

பிரதமர் மோடி பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் மருந்தை எடுத்துக் கொண்டுள்ளார். இது தற்செயலாக நடந்ததா என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் நாடுமுழுவதும் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் முடியும் தறுவாயில் இருப்பதையடுத்து, 2-வது கட்டமாக மார்ச் 1ம் தேதியான இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

இதில் நீரிழிவு நோய்கள், கடந்த ஓராண்டாக இதயக்கோளாறு நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் உள்ளிட்ட 20 இணை நோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் தகுதி படைத்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்று காலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கரோனா தடுப்பூசி முதல் டோஸை பெற்றுக் கொண்டார்.

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளதாவது:

‘‘கோவிஷீல்டு கரோனா தடுப்பு மருந்து 64 வயதுக்கு மேற்பட்டோருக்கு உரிய பலன் அளிக்கவில்லை எனவும், 18 முதல் 64 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே பலன் அளிக்கிறது என ஜெர்மனி அரசு கூறியுள்ளது.

இந்தநிலையில் பிரதமர் மோடி பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் மருந்தை எடுத்துக் கொண்டுள்ளார். இது தற்செயலாக நடந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த குழப்பத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இருப்பினும் அனைத்து மக்களும் கரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து. மக்களிடம் இதனை வலியுறுத்திக் கொள்கிறேன்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x