Last Updated : 28 Feb, 2021 11:23 AM

 

Published : 28 Feb 2021 11:23 AM
Last Updated : 28 Feb 2021 11:23 AM

19 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட்: செயற்கைக்கோளில் பிரதமர் மோடி படம்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்: படம் | ஏஎன்ஐ.

ஸ்ரீஹரிகோட்டா

பிரேசிலின் அமேசேனியா உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவண் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

பிரதமர் மோடியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட சதீஸ் தவண் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் முதல் ராக்கெட் இதுவாகும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும் 78-வது ராக்கெட் மற்றும் பிஎஸ்எல்வி பிரிவில் 53-வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் செலுத்தப்படுவதற்கான 26 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று காலை 8.54 மணிக்குத் தொடங்கியது.

கவுண்ட் டவுன் முடிந்தநிலையில், இன்று காலை 10.24 மணிக்கு பிஎஸ்எல்வி-51 ராக்கெட் பிரேசிலின் அமேசானியா செயற்கைக்கோள் மட்டுமின்றி, சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் எஸ்டி சாட் செயற்கைக்கோள் உள்ளிட்ட19 செயற்கைக்கோள்களைச் சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இஸ்ரோ நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிட் (என்எஸ்ஐஎல்) சார்பில் முதல் முறையாக வர்த்தகரீதியாக பிரேசில் நாட்டின் செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. இதன் மூலம் முதல் முறையாக இஸ்ரோ நிறுவனத்துக்கு அந்நியச் செலாவணியும் கிடைக்கும்.

இந்த பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்டில் பிரேசில் நாட்டின் அமேசேனியா-1 செயற்கைக்கோள், இந்தியாவின், சதீஸ் தவண் செயற்கைக்கோள், ஜிடி சாட், ஜிஹெச்ஆர்சிஇ செயற்கைக்கோள், ஸ்ரீ சக்தி செயற்கைக்கோள், பாதுகாப்புத் துறையின் சிந்து நேத்ரா ஆகிய செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. இது தவிர அமெரிக்காவின் ஸ்பேஸ் பிஇஇ, மெக்சிகோவின் நானோ கனெக்ட் செயற்கைக்கோள்கள் என மொத்தம் 19 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா, யுனிட்டி சாட் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 3 செயற்கைக்கோள்களை, கோவையைச் சேர்ந்த ஸ்ரீ சக்தி இன்ஸ்ட்டியூட் பொறியியல் கல்லூரி, ஸ்ரீபெரும்புதூர் ஜேபிஆர் கல்லூரி, நாக்பூர் ஜிஹெச் ரெய்சோனி கல்லூரியின் செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன.

இதில் பிரேசிலின் அமேசானியா செயற்கைக்கோள் அமேசான் காடு அழிப்புத் திட்டங்களைக் கண்காணிக்கவும், காடுகளின் சூழல், வேளாண் சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்யவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமேசானியா செயற்கைக்கோள் 637 கிலோ எடை கொண்டதாகும்.

இந்த பிஎஸ்எல்வி ராக்கெட் 4 படிநிலைகளாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் 3-ம் படிநிலையில் திடநிலை எரிபொருளும், 2-வது மற்றும் 4-வது படிநிலையில் திரவ நிலையில் எரிபொருளும் நிரப்பப்பட்டுள்ளன.

இந்த செயற்கைக்கோள்கள் விண்ணிலிருந்து புறப்பட்ட 17 நிமிடங்களில் பிஎஸ்4 இன்ஜின் செயல்பாடு நிறுத்தப்பட்டு, பிரதான செயற்கைக்கோளான பிரேசிலின் அமேசேனியா செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்படும். அதன்பின் 58 நிமிடங்களுக்குப் பின் ராக்கெட் இன்ஜின் மீண்டும் இயக்கப்பட்டு, மீதமுள்ள 18 செயற்கைக்கோள்களையும் அடுத்த 4 நிமிடங்களில் நிலைநிறுத்தும். ஒட்டுமொத்தமாக ராக்கெட் 2 மணி நேரம் 8 நிமிடங்கள் பயணிக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x