Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

தமிழ் வருடப்பிறப்பு முதல் ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்கள் அனுமதி: திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு கூட்டத்தில் தீர்மானம்

திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது.

திருமலை

தமிழ் வருடப்பிறப்பான ஏப்ரல் 14-ம் தேதி முதல் ஆர்ஜித சேவைகளுக்கு பக்தர்களை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம்நடைபெற்றது. இதில் 2021-21-ம்ஆண்டுக்காக ரூ.2,937.82 கோடிக்கு தேவஸ்தான பட்ஜெட்டுக்கு ஒருமனதாக தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அறங்காவலர் சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஓராண்டாக கரோனா நிபந்தனைகளால் பக்தர்கள் ஆர்ஜித சேவைகளுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வரும் ஏப்ரல் 14-ம் தேதி முதல் வழக்கம்போல் பக்தர்கள் அனைத்து சேவைகளுக்கும் நேரடியாக அனுமதிக்கப்படுவர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

இதில் கண்டிப்பாக கரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும். விரைவில் தேவஸ்தான ஊழியர் கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.

கோயிலுக்கோர் கோமாதா திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பசுவை தேசிய விலங்காக அறிவிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.

ஏழுமலையான் கோயிலைப் போன்றே இனி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும் துலாபாரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் மும்பை, ஜம்முவில் ஏழுமலையான் கோயில் கட்டப்படும்.

ஸ்ரீ வாரி பாதை வழியாக திருமலைக்கு நடந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ஸ்ரீ ராமர் அறக் கட்டளையினர் அனுமதி வழங்கி னால், கோயில் அருகே திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமண மண்டபம் அல்லது பக்தர்கள் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி பேசினார். கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தேவஸ்தான உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x