Published : 27 Feb 2021 03:20 PM
Last Updated : 27 Feb 2021 03:20 PM

‘‘காங்கிரஸ் பலவீனமாக உள்ளது; குலாம் நபி ஆசாத்துக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படாதது ஏன்’’ - கட்சித் தலைமைக்கு கபில் சிபல் சரமாரி கேள்வி

குலாம் நபி ஆசாத்தின் அனுபவத்தை காங்கிரஸ் கட்சி ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது எனக்கு புரியவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

காங்கிரஸுக்கு முழுநேர தலைவர் நியமிக்கப்பட வேண்டும், கட்சி அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என வலியறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இந்த விவகாரம் கட்சியில் பெரும் புயலை கிளப்பியது. இவர்களுக்கு எதிராக கட்சி தலைமை ஆதரவு தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். அவ்வப்போது அவர்கள் கூடி விவாதித்து வருகின்றனர்.

சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடும், ராகுல் காந்தி எடுக்கும் முக்கிய முடிவுகளும், பேச்சும் அதிருப்தி தலைவரக்ளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அதிருப்தி தலைவர்கள் அமைக்கும் ஆலோசனைக் கூட்டம், செயல்பாடுகள் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சித் தலைமை தீவிரமாக கவனித்து வருகிறது, இதுவரை அவர்களின் செயல்பாடுகள் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் குளோபல் காந்தி அறக்கட்டளை சார்பில் ஜம்முவில் 3 நாட்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று தொடங்கியுள்ள நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் 23 தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.

குலாம் நபி ஆசாத்தின் அறக்கட்டளை சார்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் கபில் சிபல், ஆனந்த் சர்மா, விவேக் தன்கா, பூபேந்தர் சிங் ஹூடா, மணிஷ் திவாரி, உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஜம்முவில் கூடும் இந்தத் தலைவர்கள் முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்தநிலையில் அந்த நிகழ்ச்சியில் மூத்த தலைவர் நிகழ்ச்சியில் கபில் சிபல் பேசியதாவது:

‘‘உண்மை என்னவென்றால் காங்கிரஸ் கட்சி பலவீனமாகி கொண்டே வருகிறது. அதனால் தான் நாங்கள் இங்கு கூடியுள்ளோம். இதற்கு முன்பும் நாங்கள் கூடினோம். காங்கிரஸ் கட்சியை வலிமையாக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.

குலாம்நபி ஆசாத்தின் பங்கு என்ன? விமானத்தை இயக்கும் திறன் கொண்டவர். விமானத்தின் பழுதை நீக்குவதில் பொறியாளர்களையும் தோற்கடிக்க கூடியவர். குலாம் நபி ஆசாத் பொறியாளரை விடவும் அனுபவம் வாய்ந்தவர்.

காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட நிலவரத்தை நன்கு அறிந்தவர் குலாம் நபி ஆசாத். ஒவ்வொரு மாவட்டம் வரையிலும் கட்சியின் நிலவரம் அவருக்கு தெரியும். அவர் நாடாளுமன்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் வகையில் மீண்டும் அவருக்கு எம்.பி. வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். அவரது அனுபவத்தை காங்கிரஸ் கட்சி ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என எனக்கு புரியவில்லை. ’’ எனக் கூறினார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அண்மையில் பேசிய வடக்கு, தெற்கு என்ற பேச்சு அந்தக்கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் பேச்சுக்கு ஏற்கெனவே காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஆனந்த் சர்மா, கபில் சிபல் ஆகியோர், தங்களின் கருத்துக்களையும், அதிருப்திகளையும் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x