Last Updated : 26 Feb, 2021 05:50 PM

 

Published : 26 Feb 2021 05:50 PM
Last Updated : 26 Feb 2021 05:50 PM

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல்; மே 2-ம் தேதி தேர்தல் முடிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தலும், அசாம் மாநிலத்துக்கு 3 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

''அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்கள், பகுதிகளில் சட்டம்- ஒழுங்கு சிக்கல் இருப்பதால் அங்கு ஒரே கட்டமாக நடத்த முடியாது என்பதால், 3 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. மார்ச் 27-ம் தேதி முதல் கட்டத் தேர்தல். ஏப்ரல் 1-ம் தேதி 2-ம் கட்டத் தேர்தல். 6-ம் தேதி 3-ம் கட்டத் தேர்தல்.

வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது.

கேரளாவில் வாக்கு மையங்கள் அதிகரிப்பு

கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும். மலப்புரம் மக்களவை இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும். கேரளாவில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த முறை 21,498 மையங்கள் இருந்த நிலையில், இந்த முறை 40,771 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் சட்டப்பேரவைக் காலம் ஜூன் 1-ம் தேதி முடிகிறது. இங்குள்ள 140 தொகுதிகளில் எஸ்.சி. பிரிவினருக்கு 14 தொகுதிகளும், பழங்குடியினருக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும்

மேற்கு வங்கத் தேர்தல்

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது கடினம் என்பதால், 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

முதல் கட்டத் தேர்தல் மார்ச் 27-ம் தேதியும், 2-வது கட்டம் ஏப்ரல் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது. 3-வது கட்டம் ஏப்ரல் 6-ம் தேதியும், 4-வது கட்டம் ஏப்ரல் 10-ம் தேதியும், 5-வது கட்டம் ஏப்ரல் 17-ம் தேதியும் நடைபெறும். 6-வது கட்டத் தேர்தல் ஏப்ரல் 22-ம் தேதியும், 7-ம் கட்டத் தேர்தல் தேதி ஏப்ரல் 26-ம் தேதியும், 8-வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதியும் நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைக் காலம் மே 30-ம் தேதியுடன் முடிகிறது. இங்கு 294 தொகுதிகள் உள்ளன. இதில் எஸ்.சி. பிரிவிருக்கு 68 தொகுதிகளும், பழங்குடியினருக்கு 16 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

5 மாநிலங்களிலும் சேர்த்து 18.64 கோடி வாக்காளர்கள் உள்ளனர், 5 மாநிலங்களிலும் 2.70 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

வாக்குப்பதிவு வீடியோ செய்யப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகள் இணைய வழியில் கண்காணிக்கப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது, இரு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஆன்லைன் வழியாகவும் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். வேட்பாளருடன் சேர்ந்து 5 பேர் மட்டுமே வாக்குச் சேகரிக்க அனுமதிக்கப்படும்

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் தபால் வாக்குகளைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்கலாம். வாக்குப் பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒரு தொகுதிக்கு வேட்பாளர் ஒருவர் ரூ.30.80 லட்சம் மட்டும் செலவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x