Last Updated : 26 Feb, 2021 05:28 PM

 

Published : 26 Feb 2021 05:28 PM
Last Updated : 26 Feb 2021 05:28 PM

அசாமில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல்; கேரளாவில் ஏப்ரல் 6-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேட்டி அளித்த காட்சி: படம் | ஏஎன்ஐ.

அசாம் மாநிலத்துக்கு 3 கட்டங்களாகவும், கேரள மாநிலத்துக்கு ஒரே கட்டமாகவும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:

கரோனா நெருக்கடியின்போது சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கரோனா முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் 234 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகள், கேரளாவில் 140 தொகுதிகள், அசாமில் 126 தொகுதிகள், புதுச்சேரியில் 30 தொகுதிகள் என மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

5 மாநிலங்களிலும் சேர்த்து 18.64 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 5 மாநிலங்களிலும் 2.70 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

வாக்குப்பதிவு வீடியோ செய்யப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகள் இணைய வழியில் கண்காணிக்கப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது, இரு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஆன்லைன் வழியாகவும் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். வேட்பாளருடன் சேர்ந்து 5 பேர் மட்டுமே வாக்குச் சேகரிக்க அனுமதிக்கப்படும்

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் தபால் வாக்குகளைத் தேர்ந்தெடுத்து வாக்களிக்கலாம். வாக்குப் பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒரு தொகுதிக்கு வேட்பாளர் ஒருவர் ரூ.30.80 லட்சம் மட்டும் செலவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. புதுச்சேரியில் மட்டும் ஒரு தொகுதிக்கு 22 லட்சம் செலவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவை மே 31-ம் தேதியுடன் முடிகிறது. அங்கு 126 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 8 தொகுதிகள் எஸ்.சி. பிரிவினருக்கும், 16 தொகுதிகள் எஸ்.டி. பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைக் காலம் மே 24-ம் தேதியுடன் முடிகிறது. இங்குள்ள 234 தொகுதிகளில் 44 தொகுதிகள் எஸ்.சி. பிரிவினருக்கும், 2 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைக் காலம் மே 30-ம் தேதியுடன் முடிகிறது. இங்கு 294 தொகுதிகள் உள்ளன. இதில் எஸ்.சி. பிரிவிருக்கு 68 தொகுதிகளும், பழங்குடியினருக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கேரளாவில் சட்டப்பேரவைக் காலம் ஜூன் 1-ம் தேதி முடிகிறது. இங்குள்ள 140 தொகுதிகளில் எஸ்.சி. பிரிவினருக்கு 14 தொகுதிகளும், பழங்குடியினருக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் எஸ்.சி. பிரிவினருக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். மார்ச் 27-ம் தேதி முதல் கட்டத் தேர்தல். ஏப்ரல் 1-ம் தேதி 2-ம் கட்டம், 6-ம் தேதி 3-ம் கட்டத் தேர்தல் நடைபெறும்.

கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும். மலப்புரம் மக்களவை இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெரும்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும்.

புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறும்.

மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x