Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM

அரசு வேலைவாய்ப்பில் தகுதியானவர்களை புறக்கணிப்பது அரசியல் சட்டத்தை மீறும் செயல்: ஜார்க்கண்ட் மனுதாரர்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஜார்க்கண்ட் மாநில அரசு, காவல் துணை ஆய்வாளர்கள், சார்ஜன்ட்கள் மற்றும் கம்பெனி கமாண்டர்கள் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2008-ம் ஆண்டு விளம்பரம் வெளியிட்டது. இது தொடர்பான போட்டித் தேர்வின் அடிப்படையில், 382 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இதில் முறைகேடுநடந்ததாக புகார் எழுந்ததையடுத்து, இதுகுறித்து ஆராய மாநில டிஜிபி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.

இதனிடையே, தேர்வு எழுதியவர்களில் சிலர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “எங்களைவிட குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மதிப்பெண் தகுதி அடிப்படையில் மறுநியமனம் செய்ய உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அரசின் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைப்படி 42 பேரின் பணி நியமனங்களை அரசு ரத்து செய்தது. அதற்கு பதிலாக தகுதி அடிப்படையில் திருத்தப்பட்ட நியமன பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 43 பேர் புதிதாக இடம்பெற்றிருந்தனர். இதையடுத்து, பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட 42 பேரும் உயர் நீதிமன்றத்தை அணுகினர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், 43 பேர் நியமனம் செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, பணி இழந்த 42 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் எல்.நாகேஷ்வர ராவ் மற்றும் இந்திரா பானர்ஜி அமர்வு, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “தகுதி அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.அரசுப் பணிக்கான போட்டித் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றவர்களை புறக்கணித்துவிட்டு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி வழங்குவது அரசியல் சாசன சட்டத்தின் 14 மற்றும் 16-ம் பிரிவுகளை மீறும் செயல் ஆகும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x