Last Updated : 25 Feb, 2021 12:22 PM

 

Published : 25 Feb 2021 12:22 PM
Last Updated : 25 Feb 2021 12:22 PM

மகாராஷ்டிராவில் ஒரே பள்ளியில் 229 மாணவர்களுக்கு கரோனா தொற்று: பள்ளி மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கோப்புப்படம்

மும்பை

மகாராஷ்டிராவில் வாஷிம் மாவட்டத்தில் ஒரே பள்ளியில் படித்து வரும் 229 மாணவர்களுக்கும், அங்கு பணியாற்றும் 4 ஆசிரியர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அந்தப் பள்ளிக்கூடம் மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

கரோனாவில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெரும்பாலும் யாவத்மால், அமராவதி மாவட்டத்தில் இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு மாவட்டங்களிலும் சமீபகாலமாக கரோனா பரவல் அதிகரித்து அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் மட்டும் 8,807 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 80 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த் 129 நாட்களுக்குப் பின் 8 ஆயிரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டது இதுதான் முதல் முறையாகும். அதேபோல கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதிக்குப் பின் 80 பேருக்குமேல் ஒரே நாளில் உயிரிழந்ததும் இதுதான் முதல் முறை.

இதன் மூலம் மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்த கரோனா பரவல் 21.21 லட்சமாக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய 52 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வாஷிம் மாவட்டத்தில் பாவனா அரசுப் பள்ளியிலும், பள்ளி விடுதியிலும் தங்கியிருந்த 229 மாணவர்கள், 4 ஆசிரியர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களில் பெரும்பாலும், யாவத்மால், அமராவதி மாவட்டங்களிலிருந்து வருகின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, பள்ளிக்கூடம், பள்ளி சுற்றியிருக்கும் பகுதி ஆகியவை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், கடந்த வாரம் லட்டூர் மாவட்டம், மாரத்வாடா பகுதியில் ஒரு பள்ளியில் 39 மாணவர்களுக்கும், 5 ஊழியர்களுக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாஷிம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், அங்குள்ள ஒரு கோயிலில் நேற்று முன்தினம் மக்கள் கரோனா விதிமுறைகளை மீறி அதிக அளவில் கூடியிருந்தது சர்ச்சையானது.

ஆனால், மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் பல்வேறு மாவட்டங்களிலும் மக்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுச் செல்கின்றனர்

மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் முகக்கவசம் அணியாத 23 ஆயிரம் பேரிடம், ரூ.45 லட்சம் அபராதமாக போலீஸார் வசூலித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x