Last Updated : 24 Feb, 2021 10:00 PM

 

Published : 24 Feb 2021 10:00 PM
Last Updated : 24 Feb 2021 10:00 PM

சபரிமலை போராட்ட வழக்குகள் வாபஸ்; கேரள அரசு முடிவு: முதல்வர் மன்னிப்பு கோர பாஜக வலியுறுத்தல்

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் கேரள அரசு சபரிமலை போராட்டம், சிஏஏ எதிர்ப்புப் போராட்ட வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.

இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சபரிமலையில் பெண்கள் நுழைவது தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள், சிஏஎ எதிர்ப்புப் போராட்ட வழக்குகளை வாபஸ் பெற அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கிரிமினல் தன்மையற்ற வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலையில் ஐயப்ப தரிசனம் மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலும் பாரம்பரிய நடைமுறையை எதிர்ப்பதா என்ற கோஷங்களுடன் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து, போராட்டக்காரர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 2018-19 காலகட்டத்தில் சபரிமலை போராட்டம் தொடர்பாக 2000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், கேரள அரசு சபரிமலை போராட்டம், சிஏஏ எதிர்ப்புப் போராட்ட வழக்குகளை வாபஸ் பெற முடிவு செய்துள்ளது. .

கேரள அரசின் இந்த முடிவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வரவேற்றுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐயப்ப பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்தமைக்கு முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும், சபரிமலை போராட்ட வழக்குகளையும், குடியுரிமை திருத்தச் சட்ட போராட்ட வழக்குகளையும் சமநிலையில் பார்ப்பது ஏற்புடையது அல்ல என்றும் விமர்சித்துள்ளது.

தமிழகம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயனின் இந்த அறிவிப்பு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் சபரிமலை வழக்குகள் வாபஸ் பெறப்படும் எனக் கூறிவந்தது. இந்நிலையில், இடதுசாரி ஜனநாயக முன்னணியின் இந்த அறிவிப்பு இந்துக்களின் வாக்குகளைக் குறிவைக்கும் செயல் என்ற விமர்சனத்தைப் பெற்றுள்ளது.

ஆனால், மாநில தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்டோரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஏ.விஜயராகவன், இடதுசாரி முன்னணிக்கு ஜனநாயகப் போராட்டங்கள் மீது எப்போதும் எதிர்மறை பார்வை இல்லை. மக்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x