Published : 23 Feb 2021 06:27 PM
Last Updated : 23 Feb 2021 06:27 PM

குஜராத் தேர்தலில் திடீர் திருப்பம்; சூரத்தில் ஆம் ஆத்மி 27 இடங்களில் அபார வெற்றி

குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சி தேர்தலில் 27 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது ஆம் ஆத்மி. டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் 26-ம் தேதி குஜராத் செல்கிறார்.

குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த மாநகராட்சிகள் பாஜக வசம் இருந்து வருகிறது.

இந்த தேர்தலில் 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முதல்வர் விஜய் ரூபானி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார். விறுவிறுப்பாக நடந்த இந்த தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

இந்தநிலையில் 6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே பாஜக பல வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 236 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 49 வார்டுகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதர கட்சிகள் 17 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

சூரத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 120 இடங்களில் இதுவரை முடிவு அறிவிக்கப்பட்ட இடங்களில் பாஜக 93 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 27 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

சூரத் மாநகராட்சியில் கிடைத்த வெற்றியை ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்து குஜராத் ஆம் ஆத்மி பொறுப்பாளர் குலாப் சிங் கூறுகையில் ‘‘பாஜகவின் கோட்டையை உடைத்துள்ளது ஆம் ஆத்மி. கேஜ்ரிவாலின் ‘டெல்லி மாடல்’ குஜராத்தில் நம்பிக்கை அளிக்கிறது’’ எனக் கூறினார்.

இந்த வெற்றியைடுத்து குஜராத் மாநிலத்திற்கு அரவிந்த் கேஜ்ரிவால் செல்லவுள்ளார். சூரத் நகரில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெறும் வாகனப் பேரணியிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x