Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி

நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.

அன்னியச் செலாவணி மோசடிதொடர்பாக இவர் மீது அமலாக்கத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதனால் இவர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. தன்னை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கார்த்தி சிதம்பரம்தொடர்த்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது என அடிஷனல் சொலிசிட்டர் எஸ்.வி. ராஜு வாதிட்டார். இதற்கு முன்பு அவர் வெளிநாடு செல்லஅனுமதிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் ரூ.10 கோடி டெபாசிட் செய்த பிறகு அனுமதிக்கப்பட்டார் என குறிப்பிட்டார்.

கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நாடாளுமன்ற உறுப்பினருக்கு நிபந்தனைகள் விதிக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அவர், எங்கும் ஓடிவிட மாட்டார் என்று வாதிட்டார்.

ரூ.2 கோடி டெபாசிட்

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ரூ.2 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துவிட வேண்டும் என்றும், வெளிநாட்டில் அவர் செல்லுமிடங்கள் மற்றும் அவர் தங்குமிட விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

6 மாதங்களுக்கு அவர் வெளிநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள அனுமதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x