குஜராத் மாநிலங்களவைத் தேர்தல்; 2 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: அகமது படேல் இடத்தையும் இழந்தது காங்கிரஸ்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் 2 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவால் ஏற்பட்ட காலி இடத்துக்கும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை.

குஜராத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமத் படேலும், பாஜக எம்.பி. அபய் பரத்வாஜும் மரணமடைந்தனர். அகமது படேலுக்கு 2023-ம் ஆண்டு வரையிலும், பரத்வாஜுக்கு 2026 வரையிலும் பதவிக்காலம் இருந்தது. அதற்கு முன்பே அவர்கள் மரணமடைந்ததால் அந்த இரு தொகுதிகள் காலியாகின.

இதேபோல அசாமில் போடோ மக்கள் முன்னணி எம்.பி. பிஸ்வாஜித் டைமாரி தனது பதவியை நவம்பர் இறுதியில் ராஜினாமா செய்தார். எனவே இந்த தொகுதியும் காலியானது.

காலியான 3 மாநிலங்களவை இடங்களுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு 11-ம் தேதி வெளியிடப்பட்டது. போட்டி இருந்தால் தேர்தல் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில் பாஜக சார்பில் தினேஷ் அனவாடியாவும், ராம்பாய் மொக்ரியாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரையும் அறிவிக்கவில்லை. அகமது படேல் வெற்றி பெற்ற இடத்திற்கும் கூட காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை.

இந்தநிலையில் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த நிலையில் அதனை திரும்ப பெற இன்று கடைசி நாளாகும். பின்னர் அதன் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இரண்டு இடங்களுக்கு இருவர் மட்டுமே போட்டியிட்டதால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in