Published : 21 Feb 2021 06:11 PM
Last Updated : 21 Feb 2021 06:11 PM

மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று; பரிசோதனையை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பரிசோதனையை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,45,634 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.32 சதவீதம்.

சிகிச்சை பெறுபவர்களில் 74 சதவீதத்துக்கும் அதிகமானோர், கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளனர். சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களில், தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.

கேரளாவில் கடந்த 4 வாரங்களாக, வார சராசரி கோவிட் பாதிப்பு குறைந்தபட்சம் 34,800 முதல் அதிகபட்சமாக 42,000 வரை இருந்தது.

மகாராஷ்டிராவில் வார பாதிப்பு 18,200-லிருந்து 21,300 ஆக அதிகரித்துள்ளது.

தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்கள், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

துரித பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என கண்டறிப்பட்டவர்களுக்கும், ஆடி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 1.10 கோடியை கடந்து விட்டது.

36வது நாளான நேற்று, 4,32,931 கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டன.

இதுவரை மொத்தம் 1.06 கோடி பேர் (1,06,89,715) கோவிட் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் வீதம் 97.25 சதவீதம். இது உலகிலேயே மிக அதிகம்.

கடந்த 24 மணி நேரத்தில், 101 கோவிட் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x