Published : 13 Mar 2014 12:00 AM
Last Updated : 13 Mar 2014 12:00 AM

பவன் கல்யாண் புதிய கட்சி?- சிரஞ்சீவிக்கு தலைவலி

சீமாந்திரா பகுதியில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பா.ஜ. என வேறு கட்சிகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இதனிடையே முன்னாள் முதல்வர் கிரண் குமார் ரெட்டி, ஜெய் ஒருங்கிணைந்த ஆந்திரா எனும் பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால் இந்த கட்சியிலும் காங்கிரஸின் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ க்கள் பலர் சேர்ந்துள்ளனர்.

அதனால் சீமாந்திரா பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 'டிக்கெட்' கேட்பவர்கள்கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் நாளை தனது புதிய கட்சி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு செய்ய உள்ளார் என தெரிய வந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இவர் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை ‘ஜன சேனா' என பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இவரது கட்சி, முதல்கட்டமாக இந்த தேர்தலில், 50 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் என கூறப்படுகிறது. தனது சொந்த தம்பியே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக புதிய கட்சி தொடங்குவதால், காங்கிரஸின் பிரசார கமிட்டித் தலைவரான சிரஞ்சீவிக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே சீமாந்திராவில் வீழ்ந்த கட்சியை நிமிர்த்தவே படாத பாடு பட வேண்டிய நிலையில், தம்பியின் புதிய கட்சியால் தனது ரசிகர்களையும் இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பவன் கல்யாண் தொடங்க உள்ள கட்சிக்கு ரசிகர்களின் ஆதரவும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிரஞ்சீவி குடும்பமும், ரசிகர்களும் ஆந்திர மாநிலத்தை போன்றே இரண்டாக பிளவுபட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x