Published : 20 Feb 2021 07:34 AM
Last Updated : 20 Feb 2021 07:34 AM

கல்வான் பள்ளத்தாக்கு இழப்பை ஒப்புக்கொண்ட சூழலில்  மோதல் வீடியோவை வெளியிட்டது சீனா

கல்வான் பள்ளத்தாக்கு இழப்பை ஒப்புக்கொண்ட சூழலில் மோதல் வீடியோவைவும் வெளியிட்டுள்ளது சீன ராணுவம்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி லடாக் எல்லையில் இந்தியாவுக்கு உட்பட்ட கல்வான் பகுதியில் சீனப் படையினர் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய வீரரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.சீன தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப் பூர்வமாக தகவல் எதுவும் வெளியிடப்பட வில்லை. ஆனால், சீனதரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்கா, ரஷ்யா உட்பட சில நாடுகளின் உளவுத் துறை தெரிவித்தது.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில், சீன தரப்பில் 5 முன்கள அதிகாரிகள், 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீன ராணுவம் முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. இதுகுறித்து சீன ராணுவம்(பிஎல்ஏ) நேற்று வெளியிட்டஅறிக்கையில், ‘‘காரகோரம்மலைப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 5 சீனஅதிகாரிகள், 4 வீரர்கள் கல்வான்பகுதியில் நடந்த மோதலில் உயிரிழந்துள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சீன அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு உயரிய விருதுகளையும் சீன ராணுவம் அறிவித்துள்ளது.
வீடியோ வெளியீடு:

சீன அரசு ஊடக பகுப்பாய்வாளர் ஷென் ஷிவெய் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அத்துடன், "இரு தரப்பு ராணுவத்தினரும் நடுக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் நதியைக் கடந்து பாறைகளுடன் கூடிய கரையை அடைகின்றன. அங்கே இருதரப்பினரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபடுகின்றனர். வாக்குவாதங்களும் நடக்கின்றன. இரவு நெருங்க, ராணுவ வீரர்கள் டார்ச் விளக்குகள், தடுப்புகளுடன் மலை உச்சியில் நிற்கின்றனர். இருதரப்பினரும் கோஷமிட்டு வசைபாடுகின்றனர்" எனப் பதிவிட்டுள்ளார்.

இன்று பேச்சுவார்த்தை:

இதற்கிடையில், பாங்காங் ஏரிப் பகுதியில் இருந்து இரு தரப்பிலும் முழு அளவில் படைகள் வாபஸ் பெறப்பட்டதாகவும், இரு தரப்பிலும் அவரவர் பகுதிகளில் வேறு முகாம்களுக்கு படைகள் அனுப்பப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக் கப்பட்டது. இதில், படைகள் வாபஸ், ஆயுதங்கள் வாபஸ், ராணுவ கட்டுமானங்கள் நீக்கம், பங்கர்கள், கூடாரங்கள் நீக்கம், தற்காலிக கட்டுமானங்களை பிரித்து அப்புறப்படுத்தல் போன்றஅனைத்து நடவடிக்கைகளும் கடந்த வியாழக்கிழமை இருதரப்பிலும் முடிவடைந்துள்ளன.

இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையில் ராணுவ கமாண்டர்கள் அளவில் இன்று காலை 10 மணிக்கு 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் காக்ரா, கிழக்கு லடாக்கின் டெப்சாங் போன்ற பகுதிகளில் படைகளை குறைப்பது குறித்து ஆலோசனை நடக்கும் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x