Published : 01 Jun 2014 09:08 AM
Last Updated : 01 Jun 2014 09:08 AM

உ.பி. பாலியல் வழக்கை சிபிஐ விசாரிக்க பரிந்துரை: தலைமைச் செயலாளர் நீக்கம்

உத்தரப் பிரதேசத்தில் கும்பலால் இரு தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடுமாறு மத்திய அரசுக்கு உ.பி. அரசு பரிந்துரை செய்துள்ளது.

இதனிடையே மாநில அரசின் தலைமைச் செயலாளர் ஜாவித் உஸ்மான் நீக்கப்பட்டு அவரது பணியிடத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி அலோக் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதான் மாவட்டத்தில் உள்ள கட்ரா சதாத்கஞ்ச் போலீஸ் சரகத்துக்கு உள்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 14, 15 வயதுடைய இரு தலித் சிறுமிகள் கடந்த மே 27-ம் தேதி காணாமல் போயினர். அடுத்த நாள் உஷைத் பகுதியில் உள்ள மாமரத்தில் பிணமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை யில், இருவரும் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு பின்பு, தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்தது.

தலித் சிறுமிகளின் குடும்பத்தி னருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உ.பி. அரசு உத்தரவிட்டது. ஆனால், நிவாரணத் தொகையை நிராகரித்த சிறுமிகளின் குடும்பத்தினர், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.

7 பேர் மீது வழக்கு

இந்த வழக்கில் 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் சகோதரர்கள் பப்பு யாதவ், அவதேஷ் யாதவ், உர்வேஷ் யாவத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் சர்வேஷ் யாதவ், சத்ரபால் யாதவ் கைது செய்யப்பட்டு, பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தின் பொறுப்பாராக இருந்த ராம்விலாஸ் யாதவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சிபிஐ விசாரணை

இந்நிலையில், உ.பி. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாலியல் பலாத்காரம் சம்பவத்தை விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிடுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய முதல்வர் அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x