

மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள மேயர் பங்களா பகுதியில், சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு நேற்று அறிவித்தது.
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எனினும் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இந்நிலையில், பால் தாக்கரேயின் 3-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவும் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது முதல்வர் பட்னாவிஸ் கூறும்போது, “பாஜக, சிவசேனா கூட்டணிக்கு வித்திட்டவர் பால் தாக்கரே. அனைவரும் மதிக்கும் வகையில் மாநிலத்தை வளர்த்தெடுக்க எங்களுக் கெல்லாம் அவர் வழிகாட்டியாக விளங்கினார். அவரது சேவையை அங்கீகரிக்கும் வகையில் மேயர் பங்களா பகுதியில் அரசு செலவில் நினைவிடம் கட்டப்படும்” என்றார்.
இதுதொடர்பாக ட்விட்டரில், “மக்களின் நலனுக்காக பால் தாக்கரே பாடுபட்டார். பெரும் பாலான மக்களால் மதிக்கப்படும் தலைவராக விளங்கினார். அவரது நினைவுநாளில் அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பால் தாக்கரே, சிவசேனா கட்சியை நிறுவினார். அவர் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி தனது 86-வது வயதில் காலமானார்.