Last Updated : 30 Nov, 2015 08:00 PM

 

Published : 30 Nov 2015 08:00 PM
Last Updated : 30 Nov 2015 08:00 PM

ராகுல் குடியுரிமை தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்ற விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றிருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞர் எம்.எல். சர்மா என்பவர், வழக்கை அவசரமாக விசாரித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இம்மனுவை கடந்த செவ்வாய்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு, அவசரமாக விசாரிப்பதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, இன்று இந்த மனு மீண்டும் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை ஆராய்ந்த அமர்வு, 'வழக்கு தொடர்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் உண்மை தன்மை கேள்விக்குறியாக உள்ளது. மேலும் முறைப்படி மனு தாக்கலாகவில்லை. எனவே ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றிருப்பதாக எழுந்த சர்ச்சை குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x