Published : 18 Feb 2021 09:04 AM
Last Updated : 18 Feb 2021 09:04 AM

இந்தியாவில் மேலும் இரண்டு வகை உருமாறிய கரோனா வைரஸ்: புதிய பயண வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

இந்தியாவில் மேலும் இரண்டு வகை உருமாறிய கரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் புதிய பயண வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் பிரிட்டன், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர்த்து மற்ற உலக நாடுகளில் இருந்து பயணப்படும் அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க வகை, பிரேசில் வகை என இரண்டு மரபணு மாறிய கரோனா வைரஸ்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை தென் ஆப்பிரிக்க வகை வைரஸ் 4 பேரிடமும், பிரேசில் வகை வைரஸ் ஒருவரிடமும் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் உருமாறிய கரோனா வைரஸால் இதுவரை இந்தியாவில் 187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டு நெகட்டிவ் என்று முடிவு வந்தவர்கள் மட்டுமே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், பயணிகள் கவனத்துக்கு. பிரிட்டன், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர்த்து மற்ற உலக நாடுகளில் இருந்து பயணப்படும் அனைத்து பயணிகளும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்.

பிரிட்டன், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பயணிகளும், ஐரோப்பா, பிரிட்டன், மத்திய கிழக்கு நாடுகள் வழியாகப் பயணப்படும் பயணிகளும் இந்தியா வந்திறங்கியதும் தங்கள் சொந்த செலவில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். தென் ஆப்பிரிக்கா, பிரேசிலில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமானங்கள் இல்லாத நிலையில் இங்கிருந்து வரும் பயணிகளுக்கும் புதிய பயண வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x