Last Updated : 21 Nov, 2015 11:54 AM

 

Published : 21 Nov 2015 11:54 AM
Last Updated : 21 Nov 2015 11:54 AM

பரங்கிப்பேட்டையிலிருந்து ஐ.எஸ். முகாம் வரை: இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை

ஹாஜா ஃபக்ருதீன், அவரது நண்பர் குல் முகமது மரகாச்சி மரைக்காயர். இவர்கள் இருவரது கதையைப் படித்தால் உலகளவில் ஐ.எஸ். கோட்பாடு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டைதான் இவர்கள் இருவரும் பிறந்து வளர்ந்த ஊர். பால்ய நண்பர்களாகிய இவர்கள் உள்ளூர் அரசுப் பள்ளியில் உயர் கல்வியை முடித்தனர். பின்னர் இருவருமே சென்னை புதுக் கல்லூரியில் (நியூ காலேஜ்) பட்டம் பயின்றனர்.

பட்டப்படிப்புக்குப் பின்னர் சில பல ஆண்டுகள் உருண்டோடின. மரைக்காயர் சவுதியிலும், ஃபக்ருதீன் சிங்கப்பூரிலும் பணியாற்றி வந்தனர்.

இந்தநிலையில் இருவரும் சிங்கப்பூரில் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்திப்பில் அவர்கள் உணர்ச்சிகரமாக விவாதித்தனர். உலகளவில் முஸ்லிம்கள் சந்திக்கும் இன்னல்கள் என்னவென்பதே அந்த விவாதத்தின் கருப்பொருளாக இருந்தது.

அந்த விவாதம் இருவரின் வாழ்க்கை திசையையும் மாற்றியது. நண்பர்கள் இருவரில் ஒருவர் இப்போது இந்தியச் சிறையில் இருக்கிறார். மற்றொருவர் சிரியாவில் ஐ.எஸ். படையில் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டார். அவர் எந்த களத்தில் போரில் இருக்கிறாரோ?!

சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் ஹாஜா ஃபக்ருதீன் இப்போது சிரியாவில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது நண்பர் முகமது மரகாச்சி மரைக்காயர் சிறையில் இருக்கிறார். இவர்கள் இருவரின் கதையும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஐ.எஸ். கொள்கை உலகளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இது வெறும் கதையல்ல இந்தக் கதை பல்வேறு உலக நாடுகளையும் ஐ,எஸ். கோட்பாட்டின் ஆதிக்கம் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து கவலை கொள்ளச் செய்துள்ளது.

முகமது மரகாச்சி மரைக்காயர், கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டார். மரைக்காயர் சவுதி அரேபியாவில் ஐந்து ஆண்டுகள் வேலை செய்துள்ளார். அதன் பின்னர் 2007-ல் சிங்கப்பூர் சென்றுள்ளார். எக்ஸான் மொபைல், ஐ.பி.எம்., போன்ற நிறுவனங்களில் வேலை செய்துள்ளார். மரைக்காயர் சிங்கப்பூர் வர முக்கிய காரணமே அவரது நண்பர் ஃபக்ருதீனை பார்க்க வேண்டும் என்பதே.

மரைக்காயரிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது பல்வேறு முக்கியத் தகவல்களும் கிடைத்தன. கல்லூரி நாட்களிலேயே மரைக்காயர் அடிப்படைவாதியாக இருந்துள்ளார். தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார். ஜனநாயகம் மீது அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை. உள்ளூர் தேர்தல்களை அவர் எதிர்த்துள்ளார்.

திசையை மாற்றிய பிரச்சாரம்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தீவிரவாத பிரச்சாரகர் பெய்ஸ் முகமதின் பேச்சுக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டார் மரைக்காயர். அதேபோல் ஏமன் நாட்டின் அன்வர் அல் அவ்லாகியின் பேச்சுகளும் அவரை வெகுவாக ஈர்த்தது. 2011-ல் அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்.

சிங்கப்பூரில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சிங்கப்பூர் தேசிய தினத்தை ஒட்டி மசூதி ஒன்றில் ஏற்றப்பட்டிருந்த அந்நாட்டு தேசியக் கொடியை அப்புறப்படுத்தியுள்ளார். இதற்காக அவரை சிங்கப்பூர் போலீஸார் கைது செய்தனர்.

பின்னாளில் சிங்கப்பூர் போலீஸார் நடத்திய விசாரணையில், ஃபக்ருதீனை மூளைச் சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய வைத்ததை மரைக்காயர் ஒப்புக் கொண்டார். சிரியா போன்ற நாடுகளில் தவிக்கும் முஸ்லிம்களுக்கு உதவுவது நமது கடமை என ஃபக்ருதீனை நம்ப வைத்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

மரைக்காயரால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஃபக்ருதீன் சிரியாவில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர் ஒருவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். அநத நபர் கூறியது போல் 1,500 டாலர் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு சிரியா பயணப்பட தயாரானார் ஃபக்ருதீன். இனி ஐ.எஸ். கலிஃபேட்டில்தான் தனது வாழ்க்கை என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

மீண்டும் ஐ.எஸ். ஆதரவாளரை தொடர்பு கொண்டார். அவர், குடும்பத்துடன் வருமாறு ஃபக்ருதீனுக்கு ஆலோசனை அளித்துள்ளார். அப்போதுதான் சிரியாவுக்குள் நுழைய எளிதாக இருக்கும் எனவும் ஃபக்ருதீனுக்கு அவர் கூறியுள்ளார். அதன்படி குடும்பத்துடன் சிரியா புறப்பட்டார் ஃபக்ருதீன். நவம்பர் 18, 2013-ல் சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஃபக்ருதீனையும் அவரது குடும்பத்தினரையும் கடைசியாக சந்தித்து வழி அனுப்பியிருக்கிறார் மரைக்காயர்.

12 நாட்கள் கழித்து ஃபக்ருதீனின் குடும்பத்தினர் துபாய் திரும்பினர். செச்சன்யாவில் இருந்து வந்த சில போராளிகளுடன் ஃபக்ருதீன் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இருப்பினும் ஐ.எஸ். ஆதிக்கம் உள்ள முக்கிய பகுதிகளுக்கு அவர்களால் செல்ல முடியவில்லை. அங்கு வாழ்வதற்கான சூழல் இல்லாததால் 12 நாட்களிலேயே ஃபக்ருதீன் குடும்பத்தினர் அனைவரும் துபாய் திரும்பியுள்ளனர்.

இந்திய உளவு நிறுவனங்கள் வசம் இருக்கும் தகவலின்படி, ஃபக்ருதீன் இரண்டாவது முறையாக சிரியாவுக்குச் செல்ல திட்டமிட்டபோது சென்னையில் இருந்து மேலும் இருவரை அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறார்.

அந்த இருவரது அடையாளமும் தெரியவந்துள்ளது. இருவரில் ஒருவருக்கு துருக்கி விசா மறுக்கப்பட்டுவிட்டது. மற்றொருவருக்கு பாஸ்போர்ட்டே இல்லை. இதனால், அவர்களை விட்டுவிட்டு மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் சிரியா புறப்பட்டுச் சென்றார் ஃபக்ருதீன். ஜனவரி 22, 2014-ல் இச்சம்பவம் நடந்தது.

தற்போதைய தகவலின்படி, ஃபக்ருதீன் சிரியா - துருக்கி எல்லையில் இருக்க வேண்டும் எனக் கூறுகின்றன உளவு நிறுவனங்கள்.

ஃபக்ருதீன் குடும்பத்துடன் சிரியா செல்ல விமான டிக்கெட்டை கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அவருக்கு சென்னையில் டிராவல் ஏஜென்சி இருக்கிறது. மேலும், தான் குடும்பத்தினருடன் பத்திரமாக சிரியா அடைந்துவிட்டதாக ஃபக்ருதீன் கன்னியாகுமரி இளைஞருக்கு தகவலும் அனுப்பியுள்ளார்.

சிரியாவுக்கான முதல் பயணம் தோல்வியடைந்த பின்னர் டிசம்பர் 2013-ல் இருந்து ஜனவரி 2014 வரை ஃபக்ருதீன் சென்னையில் தங்கியுள்ளார். அப்போது அவர் தான் படித்த புதுக்கல்லூரி மாணவர்கள் சிலரையும் மூளைச்சலவை செய்ய முயன்றுள்ளார்.

ஐ.எஸ். மீது ஈர்ப்பு கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பல இளைஞர்களும் ஃபக்ருதீனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் கடலூரில் குரான் மனனம் செய்ய பயிற்றுவிக்கும் பள்ளியை நடத்துபவர். இவரைத் தவிர சென்னையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஒருவரும், புதுக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவரும் அடங்குவர்.

உளவுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "சிரியா சென்று ஐ.எஸ்-ஸில் தங்களை இணைத்துக் கொள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிறிய குழு ஒன்று தயாராக இருந்ததற்கு நம்பத்தகுந்த ஆதாரம் இருக்கிறது.

சிரியா செல்வதற்கு முன்னர் மூன்று மாதங்களுக்கு உடற்தகுதி பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றனர். சிரியா செல்பவர்களின் குடும்பத்துக்கு மாதம் ரூ.20,000 பணமும், ஒருவேளை அவர்கள் உயிரிழந்துவிட்டால் அவர்களது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் பணமும் அளிக்கப்படும் என அந்த இளைஞர்களிடம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பணத்தை யார் அளிப்பார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை" என்றார்.

தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x