

குஜராத்தில் பஞ்சமால் மாவட்டத்தில் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்ட விவகாரத்தில் 19 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலை எரித்த முக்கியg குற்றவாளிகள் அடங்கிய குழுவில் கைது செய்யப்பட்ட ரபிக் ஹூசைன் பதுக் என்ற நபரும் அடங்குவர். கடந்த 19 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோத்ராவுக்கு வந்தபோது, ஹூசைனை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27-ம்தேதி கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கரசேவர்கள் வந்த இரு பெட்டிகளில் மர்மநபர்கள் தீவைத்தனர். இதில் ரயில் பெட்டிகளில் பயணம் செய்த 59 கரசேவர்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மிகப்ெபரிய அளவில் வன்முறை வெடித்தது.
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 31 பேரைக் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இதில் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும், 11 பேருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், அந்த 11 பேரின் மரண தண்டனையையும் குஜராத் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
இந்த வழக்கில் இன்னும் பலர் தேடப்பட்டு வருகின்றனர். அதில் முக்கியமானவர் ரபீக் ஹூசைன் பதுக் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் எரிப்பு வழக்கில் சதித்திட்டம் தீட்டிய குழுவில் ஹூசைனும் இருந்துள்ளார்,
இவர் மீது கலவரத்தைத் தூண்டுதல், கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டும் கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோத்ராவுக்கு வந்து சென்று தப்பிச்செல்ல முயன்றபோது போலஸீார் ஹீசைனைக் கைது செய்தனர்.
இதுகுறித்து பஞ்சமால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லீனா பாட்டீல் கூறுகையில் “ சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராகத் தேடப்பட்டு வந்தவர் ஹூசைன்.
ரகசியத் தகவலின் அடிப்படையில் கோத்ரா போலீஸார், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயில்வே நிலையம் அருகே உள்ள சிக்னல் பலியா பகுதியில் ஒரு வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது, ஹூசைன் சிக்கினார்.
ரயில் எரிப்பிற்கு சதித்திட்டம் தீட்டுதல், பெட்ரோல் குண்டுகள் வீசியது, கல் எறிந்தது போன்ற சம்பவங்களில் ஹூசைன் ஈடுபட்டுள்ளார். விசாரணையின் போது அனைத்து விவரங்களும் தெரியவந்து தேடியபோது சிக்கவில்லை. கடந்த 19 ஆண்டுகளாக டெல்லியில் மறைந்து ஹூசைன் வாழ்ந்துள்ளார்.
கோத்ரா ரயில் நிலையத்தில் கூலித் தொழிலாளியாக இருந்த ஹூசைன் இந்த ரயில் எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டபின், அங்கிருந்து தப்பி டெல்லி சென்றுவிட்டார். தனது குடும்பத்தைப் பார்க்க எப்போதாவது வந்து சென்றுள்ளார். டெல்லியில் கட்டிட வேலை செய்தும், கைவினைப் பொருட்ளை விற்பனை செய்தும் ஹூசைன் வாழ்ந்துள்ளார்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப்பின் ஹூசைன் தனது குடும்பத்தை சுல்தான் பாலியா பகுதிக்கு மாற்றியுள்ளார்.இந்த வீட்டுக்கு ஹூசைன் வந்து செல்கிறார் எனத் தகவல் கிடைத்தது. இந்த முறை அவரைப் பிடிக்க திட்டமிட்டோம், சுற்றி வளைத்துப் பிடித்தோம். தற்போது கோத்ரா ரயில்வே போலீஸாரிடம் ஹூசைன் ஒப்படைக்கப்படுவார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சலிம் இப்ராஹிம் பாதம், சவுகத் சர்கா, அப்துல் மஜித் யூசுப் மிதா ஆகியோர் இன்னும் தலைமறைவாக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.