Last Updated : 27 Nov, 2015 07:25 PM

 

Published : 27 Nov 2015 07:25 PM
Last Updated : 27 Nov 2015 07:25 PM

ஆம் ஆத்மி எம்எல்ஏ திரிபாதி ஜாமீனில் விடுதலை

2013-ம் ஆண்டு வன்முறை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட டெல்லி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அகிலேஷ் திரிபாதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

அகிலேஷ் திரிபாதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தன்னை அடித்துக் காயப்படுத்தியதாக பிட்டு ஜா என்பவர் டெல்லி ஆதர்ஷ் நகர் காவல் நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் திரிபாதி மற்றும் 4 பேர் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதை திரிபாதி தவிர்த்து வந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணையை நீதிமன்றம் கடந்த 23-ம் தேதி பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து திரிபாதி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் திரிபாதிக்கு பெருநகர குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கபில் குமார் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

டெல்லியில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட, ஆம் ஆத்மி கட்சியின் 5-வது எம்எல்ஏ அகிலேஷ் திரிபாதி ஆவார். இவர் டெல்லியின் மாடல் டவுன் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x