Published : 15 Feb 2021 08:59 AM
Last Updated : 15 Feb 2021 08:59 AM

நீதிமன்றத்துக்கு யார் செல்வார்கள்?- அங்கு போனால் தீர்ப்பு கிடைக்காது: முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சய் கோகய் சாடல்

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் : கோப்புப்படம்

புதுடெல்லி

நீதிமன்றத்துக்கு யாரேனும் சென்றால், அங்கு தீர்ப்புக்காக அந்த நபர் முடிவில்லாமல் காத்திருக்க வேண்டும். அங்கு தீர்ப்பு கிடைக்காது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

'இந்தியா டுடே' பத்திரிகை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பங்கேற்றார். நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றபின், தற்போது மாநிலங்களவை எம்.பி.,யாக ரஞ்சன் கோகய் இருந்து வருகிறார்.

அவர் அளித்த பேட்டியில் கூறுகையில் “மக்கள் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்குக்காகச் சென்றுவிட்டால் ஏன்தான் நீதிமன்றத்துக்கு வந்தோம் என்று கூறும் அளவுக்கு வேதனைப்படுகிறார்கள்.

நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன, நீதிபதிகள் நியமனம் விரைவாக நடைபெறவில்லை இதற்கு உடனடியாகத் தீர்வு கண்டு, செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். நீதிபதிகளைத் தேர்வு செய்வதிலும், பயிற்சி அளிப்பதிலும் மாற்றம் கொண்டுவருவது அவசியம் " எனத் தெரிவித்தார்.

ரஞ்சன் கோகய் பதவியில் இருந்தபோது, அவர் மீது பாலியல் புகார் வந்தது குறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மொய்த்ரா பேசி இருந்தார். அவர் மீது வழக்கு ஏதும் போடுவீர்களா என நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு கோகய் பதில் அளிக்கையில் “ என்னை குறிவைத்து பேசும் நபர்களுக்கு எதிராக நான் வழக்கு ஏதும் போடப்போவதில்லை. ஏனென்றால், நீதிமன்றத்துக்கு நான் சென்றால், எனக்கு தீர்ப்புக் கிடைக்காது.அதற்காக நான் முடிவில்லாமல் காத்திருக்க வேண்டும்.

இதைக் கூற எனக்கு தயக்கமும்இல்லை. யார் நீதிமன்றத்துக்குப் போவது. நீதிமன்றத்துக்குச் சென்றால் வேதனைப்பட வேண்டியது இருக்கும்.

முன்னாள் நீதிபதி இதுபோன்ற மிரட்டலுக்கு பணிந்துவிடுவாரா. என் பெயர் குறித்து குறிப்பாகப் பேசவில்லை, என் மீது குற்றச்சாட்டு கூறுவதென்றால் குறைந்தபட்சம் என் பெயரைக் கூற வேண்டும். ஆதரமில்லாத தவறான குற்றச்சாட்டு.

5 லட்சம் கோடி பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற விரும்புகிறோம். ஆனால், நீதித்துறை சீர்குலையும் நிலையில் இருக்கிறது. 2020 ஆண்டில் மட்டும் புதிதாக கீழ் நீதிமன்றங்களில் மட்டும் 60 லட்சம் வழக்குகள் வந்துள்ளன, உயர் நீதிமன்றங்களில் மட்டும் 7 லட்சம் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் 7 ஆயிரம் வழக்குகள் வந்துள்ளன.

துணை நீதிமன்றங்களில் சுமார் 4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர் நீதிமன்றங்களில் 44 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் 70 ஆயிரம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நீதித்துறையை மேம்படுத்த செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். அந்த செயல்திட்டம் என் மனதில் இருக்கிறது. அரசுப்பதவிகளில் அதிகாரிகளை நியமிக்கும் வகையில் நீதிபதிகளை நியமிக்கவில்லை. நீதிபதி பணி என்பது முழுநேரப் பணி, அர்ப்பணிப்புப் பணி. இதற்கு காலநேரம் இல்லை. 24மணிநேரமும் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு கோகய் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x