Published : 14 Feb 2021 05:50 PM
Last Updated : 14 Feb 2021 05:50 PM

கொச்சி அருகே சர்வதேச கப்பல் முனையம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

கொச்சி துறைமுகத்தில் சாகரிகா சர்வதேச கப்பல் முனையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

சென்னையில் இன்று பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி பி்ன்னர் கேரள மாநிலம் கொச்சி சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் புரோப்லின் டெரிவேடிவ் பெட்ரோகெமிகல் திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த வளாகத்தில் அக்ரிலேட், அக்லிக் அமிலம், ஆக்சோ- ஆல்கஹால் ஆகியவை தயாரிக்கப்படும். இந்தப் பொருட்கள் தற்போது அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு ரூ.3700 கோடி முதல் ரூ.4000 கோடி வரை அந்நியச் செலாவணி மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.6000 கோடி முதலீட்டு செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகம், சுத்திகரிப்பு ஆலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி பொருட்கள் விநியோக ஒருங்கிணைப்பு மற்றும் இதர வசதிகளுக்கு பயனுள்ளதாக அமையும். தீவனங்கள் தயார் நிலையில் இருப்பதற்கும், அதன் விநியோகத்தை தடங்கல் இல்லாமல் மேற்கொள்ளவும் உதவும் என்பதால், பெருமளவு செலவும் சேமிக்கப்படும். இந்த வளாகத்தை அமைத்ததன் மூலம், கொச்சி சுத்திகரிப்பு ஆலை முக்கிய பெட்ரோ கெமிகல் பொருட்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனமாக இருக்கும்.

கொச்சி வில்லிங்டன் தீவில் ரோ-ரோ வாகனங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தேசிய நீர்வழி- 3-ல், பொல்கோட்டிக்கும், வில்லிங்டன் தீவுக்கும் இடையே ரோல் ஆன்/ ரோல் ஆப் வாகனங்கள் இரண்டை இந்திய சர்வதேச நீர்வழி ஆணையம் பணியில் ஈடுபடுத்தும். எம்வி ஆதி சங்கரா, எம்வி சி.வி.ராமன் என்ற பெயர் கொண்ட இரண்டு ரோ ரோ வாகனங்கள் ஒவ்வொன்றும், ஆறு 20 அடி லாரிகள், மூன்று 20 அடி டிரெய்லர் லாரிகள், மூன்று 40 அடி டிரெய்லர் லாரிகள் மற்றும் 30 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டவை. வர்த்தகத்துக்கு உதவும் இந்த சேவை, போக்குவரத்து செலவு, பயண நேரம் ஆகியவற்றை குறைக்கும். கொச்சி சாலைகளில் போக்குவரத்து நெரிசலையும் இது வெகுவாகக் குறைக்கும்.

கொச்சி துறைமுகத்தில் சாகரிகா சர்வதேச கப்பல் முனையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். வில்லிங்டன் தீவு மீதான எர்ணாகுளம் தளத்தில் அமைந்துள்ள இது, இந்தியாவின் முதலாவது முழு அளவிலான சர்வதேச கப்பல் முனையமாகும். நவீன வசதிகளைக் கொண்ட இந்த முனையம், ரூ.25.72 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இது, சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருக்கும். வேலை உருவாக்கத்துக்கு வழி வகுத்து, வருவாயையும், அன்னியச் செலாவணியையும் ஈட்டித் தரும்.

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் விஞ்ஞான சாகர் என்னும் கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவனத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். இது ஒரு முக்கிய கடல்சார் கற்றல் மையமாகும். இந்தியாவில், கப்பல் கட்டும் தளத்தில் இயங்கும் ஒரே நிறுவனமாகவும் இது திகழும். கப்பல் கட்டுமானம், பழுது நீக்குதல் பிரிவில், பல்வேறு கப்பல்களின் பயிற்சி பெறுவோருக்கு நவீன பயிற்சி அளிக்கும் வசதிகளை இது கொண்டிருக்கும். ரூ.27.5 கோடி மூலதன மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் 114 புதிய பட்டதாரிகளை உருவாக்கும் திறன் கொண்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளின் கடல்சார் தொழிலுக்கு தேவையான திறமையான கடல்சார் பொறியாளர்களையும், பணியாளர்களையும் இது உருவாக்கும்.

கொச்சி துறைமுகத்தில் தெற்கு நிலக்கரி தள கட்டுமானத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சாகர்மாலா திட்டத்தின் கீழ், ரூ.19.19 கோடி செலவில் இது மறு கட்டுமானம் செய்யப்படுகிறது. இந்த திட்டம் நிறைவடைந்த பின்னர், கொச்சி துறைமுகத்தில், பிரத்யேக ரசாயன கையாளுதலுக்கு இது பயன்படும். இந்த மறு கட்டுமானம், சரக்குகளை வேகமாகவும், குறைந்த செலவிலும் கையாளும் திறனைப் பெறும்.

இந்த நிகழ்ச்சியில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x