Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM
இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழகம், புதுச்சேரி உட்பட5 மாநிலங்களுக்கு ரூ.3,113 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் மற்றும் புரேவி புயல்கள் கடந்த ஆண்டு இறுதியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை தாக்கின. இதில் இரு மாநிலங்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்தன. லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் உட்பட ஏராளமான பயிர்களும் புயல் காற்றில் நாசமாகின. ஆயிரக்கணக்கானோர் வீடு, வாசல்களை இழந்தனர்.
இதனிடையே, இந்தப் புயல்களால் ஏற்பட்ட சேத நிலவரம் குறித்து மத்தியக் குழுவினர் அண்மையில் ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை அளித்தனர்.
இதேபோல, கடந்த ஆண்டு ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தில் பூச்சித் தாக்குதலால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், இந்தப் பேரிடர்பாதிப்புகள் குறித்தும், அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்றுநடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, பிஹார், மத்தியபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.3,113கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், நிவர் மற்றும் புரேவி புயல் பாதிப்புகளுக்காக தமிழகத்துக்கு ரூ. 286.91 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.9.91 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக, பிஹாருக்கு 1,225.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு ரூ.280.78 கோடியும், மத்தியபிரதேசத்துக்கு ரூ.1,280.18 கோடியும் பேரிடர் நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2020-21-ம் நிதியாண்டின் தொடக்கம் முதல் தற்போது வரை,28 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.19,036.43 கோடியும், மத்திய பேரிடர் நிவாரண நிதியில் இருந்துரூ.4,409.71 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT