நவ.20-ல் பிஹார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்க வாய்ப்பு

நவ.20-ல் பிஹார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்க வாய்ப்பு
Updated on
1 min read

பிஹார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் நவம்பர் 20-ம் தேதி பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இது குறித்து மாநில ஐக்கிய ஜனதா தள தலைவர் பசிஸ்தா நாராயண் சிங் கூறும்போது, “மக்கள் தீபாவளிக் கொண்டாட்டங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு சத் விழா வருகிறது. அது நவம்பர் 18-ல் முடிகிறது. எனவே இதன் பிறகுதான் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும்” என்றார்.

இதனையடுத்து 20-ம் தேதி நிதிஷ் குமார் பதவியேற்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. லாலு பிரசாத் மகன் தேஜஸ்விக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படுமா என்பது பற்றி இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை.

5-வது முறையாக முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார் நிதிஷ் குமார். 2000-ம் ஆண்டு 7 நாட்களுக்கு பிஹார் மாநிலத்தை நிதிஷ் ஆட்சி புரிந்தார். நவம்பர் 2005-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தார் நிதிஷ். பிறகு 2010-ம் ஆண்டிலும் ஆட்சியைப் பிடித்தார்.

பிப்ரவரி 2015-ல் ஜிதன் ராம் மாஞ்சி முதல்வர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதையடுத்து 4-வது முறையாக முதல்வராக பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டார். தற்போது 5-வது முறையாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in