Published : 13 Feb 2021 03:10 AM
Last Updated : 13 Feb 2021 03:10 AM

குலாம் நபி ஆசாத் பதவிக்காலம் நிறைவு பெறுவதால் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராகிறார் கார்கே

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் நிறைவு பெறுவதையடுத்து, அப்பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்படவுள்ளார்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இருந்தார். அவரது பதவிக்காலம் வரும் 15-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அந்தப் பதவிக்கு கர்நாடகாவைச் சேர்ந்தவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவே நியமிக்கலாம் என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில், மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத்தலைவருமான வெங்கய்ய நாயுடுவுக்கு கடிதம் எழுதப்பட்டிருப் பதாகவும், அதில், மாநிலங் களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை நியமிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குலாம் நபி ஆசாத், ஜம்மு - காஷ்மீரிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர். தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளதால் அங்கு சட்டப்பேரவை இல்லை. பேரவை இல்லாததால் அந்த மாநில சட்டப்பேரவையிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஆசாத்தின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து அந்தபொறுப்புக்கு கார்கே நியமிக்கப் படவுள்ளார்.

கார்கே, கர்நாடக மாநிலம் குல்பர்காவைச் சேர்ந்தவர். தலித் இனத்தைச் சேர்ந்தவரான கார்கே, கர்நாடக காங்கிரஸ் அரசில் உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர். 2009-ம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார். அப்போது மத்திய ரயில்வே அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்தார்.

2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மக்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியாற்றினார். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வி கண்ட கார்கே, 2020-ம் ஆண்டில் மாநிலங்களவை எம்.பி.யாக கர்நாடகாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் குலாம் நபிஆசாத் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக கார்கே தேர்வு செய்யப்படுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x