Last Updated : 12 Feb, 2021 07:57 AM

 

Published : 12 Feb 2021 07:57 AM
Last Updated : 12 Feb 2021 07:57 AM

பிரதமர் மோடியின் மனிதநேய உதவி: 5 மாத பச்சிளங்குழந்தையின் உயிர்காக்கும் மருந்துக்கு ரூ.6 கோடி ஜிஎஸ்டி வரி தள்ளுபடி

பிரதமர் மோடி : கோப்புப்படம்

மும்பை


மும்பையைச் சேர்ந்த 5 மாத பச்சிளங் குழந்தையின் உயிர்காக்கும் மருந்துக்கு ஜிஎஸ்டி, இறக்குமதி வரியாக ரூ.6 கோடி செலுத்த வேண்டிய நிலையில் பிரதமர் மோடியின் உத்தரவின் பெயரில் அதைத் தள்ளுபடி செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது

.பச்சிளங் குழந்தையின் மருந்து சர்வதேச மதிப்பில் ரூ.16 கோடியாக இருப்பதால், இந்தியாவில் ரூ.6 கோடி ஜிஎஸ்டி வரி, இறக்குமதி விதிக்கப்படும். இதைத் தள்ளுபடி செய்யக்கோரி குழந்தையின் பெற்றோரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் உத்தரவின் பெயரில், ரூ.6 கோடி ஜிஎஸ்டி வரி தள்ளுபடி செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த பிரியங்கா, மிஹிர் தம்பதியின் 5 மாதக் குழந்தை தீரா காமத். இந்தக் குழந்தை மிகவும் அரிதான 'ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி' (டைப்1) எனும் நோயால் மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால், குழந்தையின் நரம்பு மண்டலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு தசைகள் செயல்படாமல் போயின. இந்தக் குழந்தைக்கு மும்பையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தையின் மருத்துவச் செலவுக்காக பிரியங்கா, மிஹிர் தம்பதி இருவரும் க்ரவுட் ஃபண்டிங் மூலம் நிதியுதவி கேட்டதில் ஏராளமான நிதி சர்வதேச அளவில் குவிந்தது. மேலும், குழந்தையின் மருத்துவச் செலவுக்கு மத்திய அரசு உதவுமாறு கோரி பிரதமர் மோடிக்கு ஆண்டு அக்டோபர் மற்றும் 2021 ஜனவரி மாதம் கடிதமும் தம்பதி எழுதினர்.

குழந்தை தீரா காமத்

அந்த கடிதத்தில் " குழந்தைக்கு தேவைப்படும் மருந்தான ஜோல்ஜென்சிமா எனும் மருந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். இந்த மருந்தின் விலை ரூ.16 கோடியாக இருக்கிறது. இந்தியாவில் இந்த மருந்து ஜிஎஸ்டி வரியாக 12 சதவீதம், இறக்குமதி வரி 23 சதவீதம் என மொத்தம் ரூ.6 கோடிவரை விதிக்கப்படும்.

ஆனால், குழந்தையின் சிகிச்சைக்காக பல்வேறு தரப்பிலும் எங்களுக்கு ரூ.12 கோடிதான் நிதியுதவி கிடைத்துள்ளது. வசதியானவர்களால்கூடரூ.12 கோடிக்கு செலவு செய்து மருத்துவம் செய்ய முடியாத சூழலில் பலரின் உதவியால் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் குழந்தைக்கு உதவி கிடைத்துள்ளது.


எங்கள் வாழ்க்கையில் ரூ.ஒரு கோடி பார்ப்பதே அரிதானது. வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தாலும் ஒருகோடியை பார்க்க முடியாது. ஆனால், எங்கள் குழந்தையின் மருத்துவச் செலவுக்காக ரூ.12 கோடி கிடைத்துள்ளது. ஆனால், அவருக்கான மருந்தை இந்தியா வரவழைக்க ரூ.16 கோடி செலவாகிறது. இதில் 35 சதவீதம் ரூ.6 கோடி வரியாகச் செலுத்துவது நி்ச்சயமாக இயலாது.

ஆதலால், குழந்தையின் நலன் கருதியும், உயிரைக்காக்கும் பொருட்டு இறக்குமதி வரி, ஜிஎஸ்டி வரியை தள்ளுபடி செய்ய வேண்டும், மருந்துகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம் என பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு குழந்தையின் பெற்றோர் கடிதம் எழுதி, இன்ஸ்ட்டாகிராமிலும் பதிவிட்டனர். மேலும், குழந்தைக்கு தேவைப்படும் மருந்தின் விவரம், சிகிச்சையின் விவரம் ஆகியவற்றையும் இணைத்து அனுப்பினர்.

மேலும், பாஜக தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய குழந்தையின் நிலையை எடுத்துக் கூறி ஜிஎஸ்டிவரி, இறக்குமதி வரியைத் தள்ளுபடி செய்ய வேண்டுகோள்விடுத்தார்.

இதையடுத்து, பிரதமர் மோடியின் உத்தரவின் பெயரில் குழந்தை தீரா காமத் உயிர்காக்கும் மருந்துக்கான இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி வரி என ரூ.6 கோடியை தள்ளுபடி செய்தும், மருந்துகளை விரைவாக விடுவிக்குமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் மனிதநேய உதவிக்கு பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். சரியான நேரத்தில் நீங்கள் அளித்த மனிதநேய உதவி நிச்சயம் குழந்தை தீராகாமத்தின் உயிரைக்காக்கும் என்று நன்றி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x