

கடந்த 2019-ம் ஆண்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 93 தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதில் 96 பேர் கைது செய்யப்பட்டனர் என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணைஅமைச்சர் ஜி கிஷன் ரெட்டி பதில் அளித்தார். அவர் கூறுகையில் “ கடந்த 2019-ம் ஆண்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 93 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன அதில் 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 76 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, 29 பேர் விடுவிக்கப்பட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் மட்டும் கடந்த 2019-ம் ஆண்டு 22 தேசத் துரோக வழக்குபதிவு செய்யப்பட்டது, இதில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். அசாம் மாநிலத்தில் 17 தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 23 பேர் கைது செய்யப்பட்டனர்.ஜம்மு காஷ்மீரில் 11 வழக்குகளும், அதில் 16 பேரும் கைது செ்யயப்பட்டனர்.
உத்தரப்பிரதேதசத்தில் 10 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். தேசத்துரோக சட்டத்தை வலுப்படுத்தும்பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் சட்டத்திருத்தத்தை அரசு கொண்டுவரும் “ எனத் தெரிவித்தார்.
தீவிரவாத வழக்குகளில் கடந்த 2016 முதல் 2019-ம் ஆண்டுவரை எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு இணைஅமைச்சர் கிஷன் ரெட்டி அளித்துப் பேசுகையில் “ 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத வழக்குகள் தொடர்பாக 5 ஆயிரத்து 922 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 132 பேர் விடுவிக்கப்பட்டனர்.
தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கையின்படி, யுஏபிஏ சட்டத்தின்கீழ் கடந்த 2019-ம் ஆண்டில் 1,948 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவி்த்தார்.