Published : 09 Feb 2021 02:06 PM
Last Updated : 09 Feb 2021 02:06 PM

பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி; இந்திய முஸ்லிமாக எனக்கு பெருமை: குலாம் நபி ஆசாத் பெருமிதம்

புதுடெல்லி

பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன் என காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் குலாம் நபி ஆசாத் 2015-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மாநிலங்களவை எம்.பி.யானார். அவரது பதவி காலம் நிறைவடைகிறது.

ஜம்மு காஷ்மீர் தற்போது 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அங்கு சட்டப் பேரவையும் அமைக்கப்படவில்லை. இதனால் குலாம் நபி ஆசாத் வேறு ஒருமாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு அவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதும் உறுதியாக தெரியவில்லை.

குலாம் நபி ஆசாத்துடன் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் இதையாட்டி அவர்களுக்கு பிரியாவிடை நடைபெற்றது. இதையொட்டி பிரதமர் மோடி பேசினார். அப்போது ‘‘குலாம் நபி ஆசாத் சிறந்த மனிதர். அவருக்கு கர்வம் எப்போதும் இருந்ததில்லை.’’ எனக் கூறி பாராட்டினார்.

குலாம் நபி ஆசாத்தை புகழ்ந்து பேசியபோது பிரதமர் மோடி கண் கலங்கினார்.

பின்னர் மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:

நாட்டில் இருந்து தீவிரவாதமும் ஒழிய வேண்டும். எல்லையைக் காக்கும் வீரர்கள் நாட்டுக்காக உயிரிழப்பது எப்போது முடிவுக்கு வரும் என்பது மக்கள் ஒவ்வொருவரின் எண்ணமாக உள்ளது.

மாநிலங்களவை நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்த எம்.பி.க்களில் நானும் விடைபெறுகிறேன். நஜீர் அகமது லாவே, முகமது ஃபயாஸ் ஆகியோருடனான நட்பு குறித்து எண்ணி பார்க்கிறேன்.

பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். அங்குள்ள சூழ்நிலைகளை பற்றி கேள்விப்படும் போது ஒரு இந்திய முஸ்லிமாக எனக்கு பெருமை ஏற்படுகிறது.

இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x