Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM
மும்பையில் அமையவுள்ள பிரம்மாண்ட வீர சிவாஜி சிலையை சுற்றுலாப் பயணிகள் காணவசதியாக கடலுக்கு அடியில்மெட்ரோ ரயில் அமைக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது.
மும்பை மரைன் டிரைவ் கடற்கரையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் உள்ளே அரபிக் கடலில், மகாராஷ்டிரா அரசு சார்பில், மகாராஷ்டிர மன்னர் சத்ரபதி வீர சிவாஜிக்கு பிரம்மாண்டமான நினைவிடம் அமைக்கப்படுகிறது. இந்த நினைவிடத்தை, ரூ.3,600 கோடி செலவில் உரு வாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நினைவிடத்தில், குதிரைமீது சிவாஜி அமர்ந்திருப்பது போல 210 மீட்டர் உயரத்துக்கு சிலை அமைக்கப்படவுள்ளது. இந்தச் சிலையின் உயரத்தை தற்போது மேலும் 2 மீட்டர் அதிகரிக்கவும், மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் சிவாஜி நினைவிடத்துக்கு சுற்றுலாப் பயணிகள் எந்த மாதத்திலும் சென்று கண்டு ரசித்து வருவதற்காக கடலுக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதையை அமைக்க மகாராஷ்டிர அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவான் கூறும்போது, “மழைக்காலங்களில் சுற்றுலாப் பயணிகள் சிவாஜி நினைவிடத்துக்குச் செல்ல வசதியாக கடலுக்கு அடியில் மெட்ரோரயில் திட்டத்தை அமைக்க விரிவான திட்டம் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த உத்தரவை பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளேன்.
சிலையைக் காண வசதியாக ரோப்வே, சீலிங்க், கடலுக்கு அடியில் மெட்ரோ ரயில் போன்றபல்வேறு திட்டங்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் இறுதியில் 12 மாதமும் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்க வசதியாக கடலுக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பது ஒன்றே சாத்தியமான ஒன்று என அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது. விரைவில் இதுதொடர்பான விரிவான திட்டம்தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்” என்றார்.
இந்த நினைவிடம் திறக்கப்படும்போது நாள்தோறும் சுமார்10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்சிலையைப் பார்க்க வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT