Last Updated : 08 Feb, 2021 10:27 PM

 

Published : 08 Feb 2021 10:27 PM
Last Updated : 08 Feb 2021 10:27 PM

உ.பி.யில் குரங்குகளை சுட்டுக்கொன்றதாக இருவர் கைது: கடும் நடவடிக்கை எடுக்க இந்துத்துவா அமைப்புகள் வலியுறுத்தல்

உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து தொல்லை தந்துவந்த இரண்டு குரங்குகளை சுட்டுக்கொன்றதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்துத்துவா அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதி வாரணாசிக்கு அருகிலுள்ளது பதோஹி. விலை உயர்ந்த தரைவிரிப்புகள் தயாரிப்பிற்கு பெயர்போன இந்நகரில் குரங்குகள் தொல்லை அதிகம்.

இவை பல சமயம் தரைவிரிப்பு தொழிற்சாலைகளில் புகுந்து அவற்றின் பல ஆயிரம் மதிப்பிலான தயாரிப்புகளை சேதப்படுத்துவது உண்டு. இதனால், அந்த தொழிற்சாலைகளால் குரங்குகளை விரட்டும் பணிக்காகவே ஆட்கள் அமர்த்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், பத்துபூர் காவல்நிலையப் பகுதியிலுள்ள ஈஸ்டர்ன் கார்பெட் கம்பெனியில் நேற்று மாலை புகுந்த இரண்டு குரங்குகள் சுட்டுக் கொல்லப்பட்டன. இந்த தகவல் மறுநாள் பரவி தொழிற்சாலை முன் கூட்டம் கூடியது.

இந்து ஜாக்ரன் மன்ச் அமைப்பினர் குரங்கை கொன்றவருக்கு கடும் தண்டணை அளிக்க வேண்டும் எனப் போராடத் துவங்கினர். இந்த தகவல் சமூகவலைதளங்களிலும் பரவி அப்பகுதியில் பதட்டம் நிலவியது.

இதையடுத்து இந்து ஜாக்ரன் மன்ச்சினர் பதோஹி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழான இவ்வழக்கை அப்பகுதி வனத்துறையினர் விசாரித்தனர்.

இதில், ஒரு குரங்கின் சடலம், அருகிலுள்ள புதரினுள் இருந்து கிடைத்தது. மற்றொரு குரங்கின் சடலத்தை இரண்டு நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில் அத்தொழிற்சாலை உரிமையாளர் ஹாஜி கலாமின் இரண்டு மகன்கள் மீது வழக்குப் பதிவானது. இதையடுத்து உடன்பிறந்த சகோதரர்களான முஸ்தகீம், புலந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மீதானக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் அதிகபட்சம் ஏழு வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கும். எனினும், அவர்கள் மீது இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டதாகவும் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தப்படுகிறது.

பலியான குரங்கிற்கான உடற்கூறு ஆய்வினை விலங்குகள் மருத்துவரான டாக்டர்.ஜே.டி.சிங் நடத்தினார். சுடப்பட்டதால் இந்த குரங்கு இறக்கவில்லை எனவும், குண்டு காயங்கள் எதுவும் அதன் உடலில் காணவில்லை என்றும் அவர் அறிக்கை அளித்துள்ளார்.

இதனிடையே, இந்து யுவ வாஹினி அமைப்பினர் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உ.பி. காவல்துறை டிஜிபிக்கும் புகார் எழுதி அனுப்பினர். அதில், பலியான குரங்கின் உடலை வேறு மாவட்டத்தில் உடற்கூறு ஆய்வு நடத்த வலியுறுத்தி உள்ளனர்.

வட மாநிலங்களில் குரங்குகளின் தொல்லையால் பல மனித உயிர்களும் பலியாகி உள்ளன. எனினும், இந்த விலங்கை இந்துக்களின் கடவுளான ஹனுமரின் உருவமாகப் பார்க்கப்பட்டு புனித விலங்காகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x