Last Updated : 07 Feb, 2021 09:29 PM

 

Published : 07 Feb 2021 09:29 PM
Last Updated : 07 Feb 2021 09:29 PM

ராஜஸ்தான், ஹரியானாவிலிருந்து வங்கதேசத்துக்கு கடத்தப்படவிருந்த 29 ஒட்டகங்கள் ஜார்கண்டில் மீட்பு

ராஜஸ்தான், ஹரியானாவிலிருந்து ஒட்டகங்கள் அண்டை நாடான வங்கதேசத்துக்கு கடத்தப்படுகின்றன. தொடரும் இந்தக் கடத்தலில் ஜார்கண்டின் பாக்கூரில் இரண்டு லாரிகளில் 29 ஒட்டகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசம் பிரோஸாபாத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் பாபி குமார், கவுசல் ஓஜா. இவர்களிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளன.

இவர்களின் கூற்றுப்படி, கடத்தப்படும் ஒட்டகங்கள் மேற்கு வங்க மாநிலத்தில் கங்கை நதி ஓடும் மால்டா, காளியாசக் மற்றும் தென் தினஜ்பூர் ஆகிய இடங்கள் வழியாக வங்கதேசத்துக்கு அனுப்பப்படுகின்றன. இதற்காக, கங்கை நதியில் பெரிய படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இது குறித்து பாக்கூர் பகுதி வனத்துறை ரேஞ்சரான அணில் குமார் கூறும்போது, ‘இந்தக் கடத்தலில் டெல்லி, உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிந்துள்ளது.

ராஜஸ்தான் அல்லது ஹரியானாவில் ரூ.15,000 சுமாருக்கு வாங்கப்படும் ஒரு ஒட்டகத்தின் விலை வங்கதேசத்துக்கு அனுப்பப்படும் போது இரண்டரை லட்சம் வரை கூடி விடுவதாகவும் கூறப்படுகிறது.

இதன் லாபத்தொகை வழியில் வரும் ஐந்து மாநிலங்களின் கடத்தல் கும்பலுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஒட்டகங்கள் கடத்தல் என்பது வங்கதேச நாட்டில் குற்றமாகக் கருதப்படுவதில்லை.’ எனத் தெரிவித்தார்.

இந்த ஒட்டகங்கள் கடத்தப்படும் பொறுப்பை ஐந்து மாநில கும்பல் தம் ஒரு எல்லையில் எடுத்து மறு எல்லையில் ஒப்படைக்கின்றனர்.

அதுவரையும், அவர்கள் நான்கு அல்லது இரண்டு சக்கர வாகனங்களில் அவற்றை பத்திரமாகப் பின்தொடர்ந்து ஒப்படைப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த வகையில் ஹரியானா, ராஜஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட ஒட்டகங்கள் நேற்று ஜார்கண்டின் பாக்கூரில் சிக்கியுள்ளன. இதுபோல், வனத்துறையினரால் பிடிக்கப்படும் ஒட்டகங்களுக்கு தீனி போட முடியாமல், சில நாட்களுக்குள் அவை ஏலம் விடப்படுகின்றன.

இவற்றை ஏலம் எடுக்க பெரும்பாலும் பொதுமக்கள் வருவதில்லை. எனவே, இடைத்தரகர்களால் ஏலம் எடுக்கப்பட்டு அவை, மீண்டும் கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டு விடுவதாகவும் கூறப்படுகிறது.

பல வருடங்களாக நடைபெற்று வரும் இதுபோன்ற கடத்தலால் இந்தியாவில் ஒட்டகங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரு புள்ளிவிவரத்தின்படி கடந்த 2012 இல் சுமார் 4 லட்சமாக இருந்த ஒட்டகங்கள் 2019 இல் வெறும் இரண்டரை லட்சமாகி உள்ளது.

தற்போது இதை, ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே அதிகம் காணப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x